இது யுத்தமல்ல! முஸ்லிம்கள் இல்லாவிடில் யுத்தம் நிறைவடைந்திருக்காது: ரவீந்திர விஜயகுணவர்த்தன

முஸ்லிம் மக்கள் இல்லாவிடின் இந்த நாட்டில் யுத்தத்தை முடித்திருக்க முடியாது. முஸ்லிம் மக்கள் எமக்கு வழங்கிய உளவுத்துறை சார்ந்த மிகப்பெரிய ஒத்துழைப்பின் காரணமாகவே எம்மால் யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்தது என கூட்டுப்படைகளின் பிரதானி ரியல் எட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

எனவே இன்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து நான் மிகவும் கவலையடைகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

அவசரகால நிலையின் கீழ் இராணுவத்தினர் குறைந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி எடுத்துள்ளனர்.

இது யுத்தமல்ல, இனவாத வன்முறையாகும். எனவே எமது அனுகுமுறை வித்தியாசமாக இருக்கும். தற்போது அவசரகால நிலையின் கீழ் இந்த விடயத்தில் தலையிட எமக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதன் கீழ் நாங்கள் குறைந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படாதவகையில் நடவடிக்கையை மேற்கொண்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்போம்.

தற்போது இராணுவத்தினர் அனைத்துப் பகுதிகளிலும் களமிறக்கப்பட்டுள்ளனர். எனவே நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால் ஒருவிடயத்தை கூற வேண்டும். இன்று நாம் உயிரோடு இருப்பதற்கு காரணம், யுத்தத்தின்போது முஸ்லிம் மக்கள் உயிர்த்தியாகத்துடன் எமக்கு வழங்கிய ஒத்துழைப்பினால் யுத்தத்தை முடித்தோம்.

முஸ்லிம் மக்களின் மொழி அறிவு எமக்கு பாரிய ஒத்துழைப்பாக இருந்தது. இன்று வீதிகளில் குண்டு வெடிக்காமல் இருப்பதற்கு முஸ்லிம் மக்களே காரணம் எனவே அவர்களின் நிலைமை தொடர்பில் நான் கவலையடைகிறேன்.

நாங்கள் குறைந்த பட்ச அதிகாரத்தைப்பயன்படுத்தி தேவையான நடவடிக்கை எடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.