சைவ ஆலயங்கள் சேதமாக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி கவனயீர்ப்பு

வடபகுதியில் சைவ ஆலயங்கள் உடைத்துச் சேதமாக்கப்படும் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தக் கோரி அகில இலங்கை சைவ மகா சபையால் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

இப்போராட்டம் எதிர்வரும் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு நல்லூர்க் கந்தசுவாமி ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது.

ஆதீன முதல்வர்கள், துறவிகள் முன்னிலை வகிக்க சைவ ஆலயங்களின் பரிபாலன சபைகள், தர்மகத்தா சபைகள் ஒன்றிணைந்து மேற்கொள்ளவுள்ள இப் போராட்டத்தின் முடிவில் வடமாகாண முதலமைச்சருக்கு மகஜர் கையளிக்கப்படும்.

மேலும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு வடமாகாண ஆளுநர் ஊடாகவும் இந்து கலாச்சார திணைக்கள பிரதிநிதி ஊடாக இந்து கலாசார அமைச்சருக்கும் மகஜர்கள் கையளிக்கப்படவுள்ளன.

தாய் மதத்தை, மனிதத்தை மதிக்கும் சகலரும் இதில் கலந்துகொள்ளுங்கள் என சைவ மகா சபை கோரிக்கை விடுத்துள்ளது.