தண்டவாளத்தில் தலை வைத்து பெண் தற்கொலை முயற்சி!! ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!!

வவுனியா, குருமன்காட்டு சந்தியில் ரயிலில் மோதுண்டு பெண்ணொருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

குருமன்காட்டு சந்திக்கு அருகேயுள்ள புகையிரத கடவையில் இன்று (28.02) காலை 12.30 மணியளவில் பெண்ணொருவர் ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;

வவுனியா, குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள சிங்கள பிரதேச சபைக்கு அருகேயுள்ள புகையிரதக் கடவைக்கு அருகே யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்தில் மோதுண்டு பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் புகையிரத கடவைக்கு அருகே நீண்ட நேரமாக நின்றுள்ளார். அப்போது அவ்விடத்தில் பணி புரிந்த கடவைக்காப்பாளர் ஏன் இவ்விடத்தில் நின்கின்றீர்கள் என வினாவிய போது ஒருவருக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.அதன் பின்னர் புகையிரத்தில் சத்தம் கேட்டவுடன் புகையிரத கடவைக்கு அருகே நடந்து சென்றுள்ளார். இதனை அவதானித்த கடவைக் காப்பாளர் புகையிரதம் வருகின்றது செல்ல வேண்டாமென தெரிவித்துள்ளார்.
எனினும், அவரின் பேச்சினை செவிமடுக்காத குறித்த பெண் புகையிரத கடவையில் தலையினை வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இதனை அவதானித்த ரயில் கட்டுப்பாட்டாளர் ரயிலினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுயற்சித்த போதும் குறித்த பெண் மீது ரயில் மோதுண்டது என சம்பவத்தினை நேரில்கண்டவர்கள் தெரிவித்தனர்.