கரவெட்டியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இளைஞரின் சடலம்..!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட கரவெட்டி பகுதியில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (25.02.18) காலை அதிகாலை வீட்டில் இருந்து சென்ற கரவெட்டியை சேர்ந்த 21 வயதுடைய மன்மதன் அருள்ராஜ் என்பவரே துப்பாக்கி சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவிதுள்ளனர்.

இந்த இளைஞனின் மரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வவுணதீவு காவல் நிலைய பொறுப்பதிகாரி பி.ரி.நசீர் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு குற்ற தடவியல் பிரிவு காவற்துறைப் பிரிவினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதுடன் திடீர் மரண விசாரணை அதிகாரியின் மரண விசாரணையை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.