யாழ்ப்பாணத்திலிருந்து படைவீரர் ஒருவர் கொண்டு வந்த குண்டு ஒன்றே தியதலவா கஹாகொல்ல பகுதியில் பயணித்த பஸ்ஸில் வெடித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் காலை 5.45 மணிக்கு கஹகொல்ல என்னும் இடத்தில் பஸ்ஸில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் படைவீரர்கள் உள்ளிட்ட 19 பேர் காயமடைந்திருந்தனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான முதல் கட்ட விசாரணைகளில், இந்த வெடிப்புச் சம்பவம் யாழ்ப்பாண இராணுவ முகாம் ஒன்றிலிருந்து படைவீரர் ஒருவரினால் கொண்டு வரப்பட்ட கைக்குண்டு ஒன்று வெடித்த காரணத்தினால் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்ற போது பஸ்ஸில் பயணம் செய்த படைவீரர் ஒருவரும் சிவிலியன் பெண் ஒருவரும், இந்த சம்பவம் பற்றி விளக்கியுள்ளனர்.
குறித்த படைவீரர், தனது காற்சட்டை பொக்கட்டில் மறைத்து வைத்து இந்த கைக்குண்டை யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு வந்துள்ளார்.
தியத்தலாவையில் பஸ்ஸில் பயணித்த போது காற்சட்டை பொக்கட்டில் இருந்த கைக்குண்டை எடுத்து, தனது பயணப் பொதிக்குள் அதனை வைக்க முயற்சித்த போது குண்டின் பாதுகாப்பு பின் கழன்று, குண்டு கீழே வீழ்ந்து இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த குண்டு வெடிப்பு காரணமாக, கைக் குண்டை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் படைவீரரின் பாதமொன்று வெட்டி அகற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரும், பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, இந்த சம்பவம் பயங்கரவாத செயற்பாடாக கருதப்பட முடியாது என இராணுவத்தினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.