அரியாலை இளைஞர் சுட்டுக் கொலை – புலனாய்வு உத்தியோகத்தர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களான காவல்துறை விசேட அதிரடிப்படையின் இருவரின் விளக்கமறியல் எதிர்வரும் ஜனவரி 22ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் வசந்தபுரம் முதலாம் குறுக்கு வீதி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய டொன் பொஸ்கோ டினேசன்என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட புலனாய்வு அதிகாரி உட்பட்டஇருவரும் நீதிமன்றக் கட்டளையின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

அந்நிலையில் சந்தேகநபர்கள் யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் இன்று முற்படுத்தப்பட்டனர்.

குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் தொடர்வதாக மன்றுக்கு அறிவிக்கப்பட்டது. அதனால் சந்தேகநபர்கள் இருவரையும் ஜனவரி 22ஆம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் கட்டளையிட்டார்