ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் இதுவரை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாளர்களுக்கு நீதி கோரி, மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் தராகி சிவராமின் 13ஆவது ஆண்டு நினைவு தினம், இன்று (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், சிவராம் உள்ளிட்ட இதுவரை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்ட பேரணியும் கண்டன போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. அத்தோடு, கையெழுத்துக்களும் சேகரிக்கப்பட்டன.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட பல இடங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

அத்தோடு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன் மட்டக்களப்பு மாநகர மேயர் ரி.சரவணபவன் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.