மாத்தளை விஜய வித்தியாலயத்தில் முதலாம் ஆண்டுக்கு மாணவன் ஒருவனை சேர்த்துக்கொள்ள 2 லட்சம் ரூபா இலஞ்சம் கோரி அதில் ஒன்றரை இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டமை தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்ட அப்பாடசாலையின் முன்னாள் பெண் அதிபருக்கு 20 வருட சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
நான்கு குற்றச்சாட்டுக்களின்கீழ் தொடர்புபடுத்தப்பட்டிருந்த குறித்த வழக்கில் அக்குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்களுக்கும் தலா 5 வருடங்கள் வீதம் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எவ்வாறாயினும் குறித்த 20 வருட சிறைத்தண்டனையை 5 வருடங்களில் அனுபவிக்க உத்தரவிட்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க குற்றவாளியான அதிபருக்கு 20000 ரூபா தடையும் விதித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு மாத்தளை விஜய வித்தியாலயத்திற்கு முதலாம் தரத்திற்கு மாணவன் ஒருவனை சேர்த்துக்கொள்வதற்காக மாணவனின் தந்தையிடம் பெற்றுக்கொண்ட ஒன்றரை இலட்சம் ரூபாவையும் தண்டனைப் பணமாக மீளவும் பெற்றுக்கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இவ்வாறு குற்றவாளியாக காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட மாத்தளை விஜய வித்தியாலயத்தில் 2014ஆம் ஆண்டு அதிபராக இருந்த 47 வயதான கலு ஆராய்ச்சி தயாவதி என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி குற்றவாளியாக மாத்தளை விஜய வித்தியாலயத்தில் அதிபராக செயற்பட்டிருந்தபோதே குறித்த அதிபரால் பாடசாலையில் முதலாம் வகுப்புக்கு மாணவன் ஒருவனை சேர்த்துக்கொள்ள ஒன்றரை இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொண்டார் என கூறியே நான்கு குற்றச்சாட்டுக்களின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் வழக்கின் தீர்ப்பினை அளித்த நீதிபதி பிரதிவாதிக்கெதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்மானித்தார். அதனால் பிரதிவாதி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார்.