ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகையால் வழிமறிக்கப்பட்ட நீதிவான்

ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகையால் நீதிவான் வழிமறிக்கப்பட்ட சம்பவமொன்று இன்று காலை யாழ். பிரதான வீதியில் இடம்பெற்றது.

ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகையையொட்டி
யாழ். நகரப் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. அதன் காரணமாக வீதிகளில் குடாநாட்டின் பல பாகங்களிலுமுள்ள பொலிஸ் நிலையங்களிலிருந்து வந்திருந்த பொலிஸார் காவல் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

ஜனாதிபதி வருகைதரவிருந்த உலங்கு வானூர்த்திகள் யாழ்ப்பாண நீதிமன்ற கட்டட தொகுதிக்கு முன்னாலிருக்கின்ற யாழ். மாநகர சபை மைதானத்தில் இறங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அந்தச் சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் கடமைக்காக நீதிமன்றத்துக்கு வந்து கொண்டிருந்த போது, அவரை பிரதான வீதியால் செல்ல விடாமல் பொலிஸார் தடுத்ததாக தெரிய வருகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.