குற்றச்செயல்கள் குறைந்து விட்டன – முதல்வர் சி.வி

யாழ். மாவட்டத்தை பொறுத்த வரையில் குற்ற செயல்கள் வெகுவாக குறைவடைந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று பொலிஸ் அதிகாரிகளுக்கும் முதலமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

பொலிஸ் அதிகாரிகள் உடனான கலந்துரையாடல்களின் போது பல விடயங்கள் பேசப்பட்டன. அதன் போது யாழில் தற்போது குற்ற செயல்கள் வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்பட்டது.

எனினும், சட்டவிரோத மண் அகழ்வுகள் அதிகளவில் இடம்பெற்று வருவதாக சில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், அவற்றை கட்டுப்படுத்த தாம் நடவடிக்கைகள் எடுப்பதாகவும், அவற்றை விரைவில் கட்டுப்படுத்தி விடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, போதை பொருள் கடத்தல்கள், வியாபாரங்களும் வெகுவாக குறைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்ததாக முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.