பெண்கள் இருந்த வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்கள் செய்த காரியம்

மின்மானி வாசிப்பாளர்கள் என்ற போர்வையில் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்கள் பெண்ணொருவரின் தாலியை அறுத்து சென்ற சம்பவம் காரைதீவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மயில்வாகனம் இராஜேஸ்வரி எனும் பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மூன்று இளைஞர்கள் மின்மானி வாசிப்பாளர் என்று கூறி கதவைத் தட்டியுள்ளனர். இதன்போது வீட்டினுள் பெண்கள் இருவர் இருந்துள்ளனர்.

ஒரு பெண் கதவைத் திறக்க, வந்தவர்களுள் இருவர் உள்நுழைந்ததும் ஒருவர் வெளியே நின்றுள்ளார். உள்ளே றிப் சுவிற்ச் பார்க்க வேண்டும் என்று கூறி இருவரும் அறைக்குள் நுழைந்துள்ளனர்.

இந்த நிலையில் ஒரு பெண்ணுக்கு சந்தேகம் வரவே அவர் கூச்சலிட்டுள்ளார். உடனே அந்த இளைஞர்கள் கொண்டு வந்த பொல்லால் பெண்களை தாக்கி விட்டு ஒரு பெண்ணின் கழுத்திலிருந்த 15 பவுண் தாலியை அறுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அருகிலிருந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் மூவரும் தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் பொலிஸார் குறித்த காட்சிகளை வைத்து தேடுதலை மேற்கொண்டு வருகின்றனர்.