மொழி உதவியாளர்கள் 3300 பேருக்கு விரைவில் நியமனம்- அமைச்சர் மனோ!!

நாட்டிலுள்ள அரச நிறுவனங்களில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பணியாற்றக்கூடிய மொழி உதவியாளர்கள் மூவாயிரத்து 300 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதற்காக விண்ணப்பிக்கும் தமிழ் மொழி விண்ணப்பதாரர்கள் ஜி.சி.ஈ. சாதாரண தர பரீட்சையில் தமிழ் மொழிக்கு மேலதிகமாக சிங்கள மொழியில் சித்தியடைந்திருக்க வேண்டும். அதே போல் சிங்கள விண்ணப்பதாரர்கள் சிங்கள மொழிக்கு மேலதிகமாக தமிழ் மொழியில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

இந்த பதவிக்காக இணைத்துக் கொள்ளப்படுபவர்கள் பயிற்சி வழங்கப்பட்டு அனைத்து அரச அலுவலகங்களிலும் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.