முல்லைத்தீவில் இளைஞன் வெட்டிப் படுகொலை!!: அக்காவும் தம்பியும் கைது!!

கடந்த 23ஆம் திகதி முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட கள்ளபாடு வடக்கினை சேர்ந்த 27 அகவையுடைய வ.சதாநிசன் என்ற இளைஞனின் படுகொலையுடன் தொடர்புடைய யாழ்ப்பாணம் சுண்ணாகத்தினை சேர்ந்த சந்தேகநபரை முல்லைத்தீவு பொலீஸார் கைதுசெய்துள்ளார்கள்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் கடந்த 23.05.18 அன்று முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் உள்ள பனங்கூடல் ஒன்றுக்குள் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட நிலையில் குறித்த இளைஞனின் உடலம் காணப்பட்டுள்ளது

குறித்த சம்பவ   இடத்திற்கு விரைந்த முல்லைத்தீவு பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சம்பவ இடத்தில் பொலீஸ் நுண்புலனாய்வு பரிசோதகர்கள், சட்டவைத்திய அதிகாரி,   நீதிபதி முன்னிலையில் உடலம் காணப்பட்ட   இடங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி உடலத்தினை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் பொது மருத்துவமனை கொண்டு சென்றுள்ளார்கள்.

அங்கு மருத்துவ அறிக்கையில் கழுத்தில் கூரியஆயுததத்தால் வெட்டப்பட்டு அதிகளவான குருதிபோக்கு காரணமாக இறந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலையுடன் தொடர்புடையவரை கைதுசெய்வதற்காக முல்லைத்தீவு மாவட்ட பொலீஸ் அதிகாரி வசந்த கந்தேவத்த உதவி பொலீஸ் அத்தியட்சகர் மயூரப்பெரேரா தலைப்பொலீஸ் பரிசோதகர் லால் சந்திரசிறி இவர்களின் ஆலோசானை உத்தரவிற்கு அமைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி எச்.கே.கங்காநாத் அவர்களின் தலைமையில் பொலீஸ் உத்தியோகத்தர்களான

ரி.சுபாஸ்,கருணாரெத்தின,சமரசிங்க,எம்.சுரேன்ராஜ்,வாசனா,கே.நிரூயன்,ஆர்.கருணாரத்ன,லக்மல் ஆகியோர் கொண்ட அணியினர் தீவிர விசாரணைகளையும் தேடுதல்களையும் முன்னெடுத்துள்ளார்கள்.

கடிகாயத்தை வைத்து ஆராய்ந்த பொலீஸார்.

இன்னிலையில் குறித்த உயிரிழந்தவரின் உடலில் வயிற்றில் வலதுபக்கத்தில் கடிகாயம் ஒன்றுகாணப்பட்டுள்ளது இதனை வைத்து முல்லைத்தீவு பொலீஸார் ஆராய்வினை மேற்கொண்டுள்ளார்கள்.

இதன்படி முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் மதுபோதையில் தகராறு மற்றும் குடும்ப பிரச்சனைகாரணமாக கடிக்கப்பட்டதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

செல்வபுரத்தினை சேர்ந்த குறித்த நபரை சென்று பார்த்தபோது அவர் அந்த பகுதியில் இல்லாத நிலையில் அவரை கண்காணிக்கும் நடவடிக்கையில் பொலீஸார் ஈடுபட்டுள்ளார்கள்.

குறித்த நபர் முல்லைத்தீவு பகுதிக்குள் வந்துள்ளமை பொலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது இன்னிலையில் 31.05.18 அன்று முல்லைத்தீவில் இருந்து வட்டுவாகல் பாலம் ஊடாக நடையில் சென்ற குறித்த சந்தேக நபரை பொலீஸார் கைதுசெய்துள்ளார்கள்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து உயிரிழந்த இளைஞனின் தலைக்கவசம், பணப்பை, மற்றும் கொலைக்காக பயன்டுத்தப்பட்ட கத்தி உள்ளிட்ட கொலையாளி பயன்படுத்திய பொருட்களை மீட்டுள்ளதுடன்  குறித்த கொலைக்குற்றவாளி உயிரிழந்த இளைஞனின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியினை அறுத்து யாழ்ப்பாணம் சுண்ணாகத்தில் உள்ள அவரது அக்காவிடம் கடையில் அடைவு வைத்து தருமாறு கொடுத்துள்ளார்.

இந்த கொலை மற்றம் களவிற்கு உதவியதாக முல்லைத்தீவு பொலீஸார் யாழ்ப்பாணம் மின்சாரநிலைய வீதி சுண்ணாகத்தில் வசிக்கும் குற்றாவாளியின் அக்காவின் வீட்டிற்கு சொன்று விசாரித்து அவரை கைதுசெய்துள்ளதுடன் குறித்த தங்தசங்கிலியினையும் மீட்டு வந்துள்ளார்கள்.

இன்னிலையில் குறித்த இரண்டு குற்றவாளிகளையும் 01.06.18 அன்று முல்லைத்தீவு மாவட்டநீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 04 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலீஸார் மேலதிக விசாரணைகளை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.