காணாமல்போன குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!!

திருகோணமலை – இலுப்பைக்குளம் கிராமசேவகர் பகுதிக்கு உட்பட்ட சிறுப்பிட்டி கிராமத்தில் காணாமல்போன குடும்பஸ்தரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி கிராமத்தை சேர்ந்த இராசரட்ணம் பிரபு எனும் 33 வயதுடைய குடும்பஸ்தர் நேற்று அதிகாலை 4 மணியளவில் வேலைக்கு சென்றுள்ளார்.

எனினும் அவர் காலை 10 மணி வரையில் வீடு திரும்பாமையினால் உறவினர்கள் தேட ஆரம்பித்துள்ளனர்.

இதன்போது அவர் பயணம் செய்த மோட்டர்சைக்கிள் இலுப்பைக்குளம், கன்னியா வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை அவதானித்த உறவினர்கள் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து மோப்பநாயின் உதவியுடன் தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போது, ஆடுமேய்க்க சென்ற ஒருவரின் தகவலின் அடிப்படையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த சடலம் இராசரட்ணம் பிரபுவினுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, சடலத்தை பார்வையிடுவதற்காக நேரில் திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம்.அப்துல் முஹீத் சென்று பார்வையிட்துடன், சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்தார்.

குறித்த நபரை கொலை செய்துதான் இவ்வாறு வயல் பகுதியில் போட்டிருப்பதாகவும், உறவினர்கள் நீதவான் முன்னிலையில் குறிப்பிட்டனர்.

மேலும், பிரேத பரிசோதனைகளை தீவிரப்படுத்துமாறும் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் பதில் நீதவான் ஏ.எம்.அப்துல் முஹீத் கட்டளையிட்டார்.