யாழ்ப்பாண வன்முறைகளை கட்டுப்படுத்தும் முகமாக மேலதிகமாக 100 பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்காக மேலதிகமாக 100 பொலிஸார்

வரவழைக்கப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னான்டோ எமது செய்திச்

சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட வடக்கு மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர்,
—- அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் அதிகரித்துள்ளன.
குறித்த வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களைக் கைதுசெய்வதற்கும், வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும்

யாழ்ப்பாணப் பொலிஸாரால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும்நிலையில், மேலதிகமாக 100 பொலிஸாரை

யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்துள்ளோம்.
இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டு எனது தலைமையின்கீழ் விசேட வேலைத்திட்டமொன்றை

முன்னெடுத்துள்ளேன்.
விசேட வேலைத்திட்டத்திற்காக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த 100 பொலிஸ

வரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்துள்ளதுடன், அவர்களுக்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான

வாகனங்களும் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
பல அரசியல்வாதிகள், ஊடகங்கள் வன்முறையில் ஈடுபடுபவர்கள்மீது தமிழீழ விடுதலைப்புலிகளைப் புலிகள் வழங்கிய

நீதியைப் போல துப்பாக்கிச்சூடு நடாத்தி வன்முறைகளைக் கட்டுப்படுத்துமாறு கூறுகிறார்கள். ஆனால் எமக்கென நீதி

முறை ஒன்று உள்ளது.
எனவே அதனடிப்படையில்தான் நாங்கள் எமது பணிகளை முன்னெடுக்க முடியும். வன்முறைகளில் ஈடுபடுபவர்களை

கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும். அதன்மூலமே அவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும்.
அத்துடன் மற்றுமொரு விடயத்தையும் இந்த இடத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.
வடக்கில் ஆவா குழு என்று ஒரு குழு இல்லை. அவ்வாறான குழுக்கள் இயங்குவதற்கும் நாம் அனுமதிக்க மாட்டோம்.
இருப்பினும் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களும் இவ்விடயத்தினை ஆவாக் குழு இயங்குவதாகக் கூறி வருகின்றனர்.
பாடசாலைகளில் கல்வி கற்றுவிட்டு வேலையற்று இருக்கும் குறிப்பாக வெளிநாடுகளில் உறவினர்கள் வதியும்

இளைஞர்கள் தமக்கிடையே வாள்வெட்டுக்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த இளைஞர்களை நாம் இனங்கண்டுள்ளோம். இவ்விடயத்திற்கு நாம் விரைவாக முற்றுப்புள்ளி வைப்போம்.

யாழ்ப்பாணத்தில் நிலவும் வன்முறைக் கலாசாரத்தை இரண்டு வாரத்திற்குள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம்.
இதேவேளை குறித்த வன்முறைக் கலாசாரத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு யாழ்ப்பாணத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ள

பொலிஸார் தமது விசேட நடவடிக்கையின் பிரகாரம் வீதிகளில் சோதனை நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். எனவே

பொதுமக்கள் பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்…… என்றும்

குறிப்பிட்டுள்ளார்.