வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் இரண்டு விவகாரங்களில் பொய்யுரைத்துள்ளார் என்று உறுப்பினர்கள் பலர் சபையில் நேற்றுப் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தினர்.
கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற அமர்வில் டெனீஸ்வரன் விவகாரம் தொடர்பில் விளக்கவுரை ஒன்றை முதலமைச்சர் நிகழ்த்தினார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்காலக் கட்டளைக்கு அமைவாகத் தன்னால் அமைச்சர் ஒருவரை நியமிக்கவோ நீக்கவோ முடியாது என்று குறிப்பிட்டிருந்தார்.
முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டது தவறு என்று ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் நேற்றுச் சுட்டிக்காட்டினர். நீதிமன்றத் தீர்ப்பை திரிபுபடுத்தி முதலமைச்சர் பொய்யுரைத்து சபையை தவறாக வழிநடத்தியுள்ளார் என்று தெரிவித்தனர்.
அரசமைப்பின் 154 எப்(5) இற்கு அமைவாக, அமைச்சர்களைப் பரிந்துரைக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கே உண்டு எனவும், அது நீதிமன்றத் தீர்ப்பினால் பறிக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
வடக்கு மாகாண ஆளுநர் அமைச்சரவையின் விவரத்தை தருமாறு கோரி கடிதம் அனுப்பினாரா என்ற கேள்விக்கு, இல்லை என்று முதலமைச்சர் அதே அமர்வில் பதிலளித்திருந்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் 5ஆம் திகதி எழுதிய கடிதத்துக்கு முதலமைச்சர் 6ஆம் திகதி பதில் அனுப்பியிருந்தமையும், 6ஆம் திகதி ஆளுநர் எழுதிய கடிதத்துக்கு முதலமைச்சர் 11ஆம் திகதி பதில் அனுப்பியிருந்தமையும் ஆதாரங்களுடன் நேற்று சபை உறுப்பினர்களால் வெளிப்படுத்தப்பட்டன.
இந்த விடயத்தில் முதலமைச்சர் பொய்யுரைத்து மக்களை முட்டாள் ஆக்கிவிட்டார் என்றும் உறுப்பினர்கள் கடுமையாகச் சாடினார்கள்.