இவ்வாறு பிணையில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் திருகோணமலை, கந்தசாமி கோயில் வீதியைச்சேர்ந்த மோகன் சசிகரன் (19வயது) உட்துறைமுக வீதியைச்சேர்ந்த தம்பிராஷ பிரனிஜன் (19வயது) மற்றும் பாரதி வீதியைச்சேர்ந்த ரவீந்திரன் மதுரன் (19வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நகர்த்தல் பத்திரத்தின் மூலம் செய்யப்பட்ட விண்ணப்பத்தையடுத்து இவ்வழக்கு இன்று திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேல் நீதிமன்ற நீதிபதியின் புகைப்படத்தை குறுஞ்செய்தி மூலம் அனுப்பி அவருடைய பெயரை பயன்படுத்தி பயமுறுத்தி தலைக்கவசத்தினால் அடித்து காயப்படுத்திய குற்றச்சாட்டிற்காக கடந்த 26ம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் மூவருக்கும் எதிராக தலைமையக பொலிஸார் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் எதிர்வரும் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் எம்.பீ.எம்.அன்பார் உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில், இவ்வழக்கு நகர்த்தல் பத்திரத்தின் மூலம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவ்வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் கைது செய்யப்பட்ட மூன்று பேரில் இருவர் இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சை எதிர்வரும் 06ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அம்மாணவர்கள் பரீட்சை எழுதவுள்ளதாகவும் நீதவானிடம் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை கருத்திற்கொண்ட திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா மூன்று பேரையும் தலா இரண்டு இலச்சம் ரூபாய் வீதம் சரீர பிணையில் செல்லுமாறும், மாணவர்கள் ஒழுக்கமுள்ளவர்களாகவும் சமூகத்திற்கு எடுத்துக்காட்டாகவும் இருக்க வேண்டும் என தெரிவித்ததுடன், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொப்பமிட வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் 09ஆம் மாதம் 03ஆம் திகதி வழக்கிற்கு சமூகமளிக்குமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.