மணிவண்ணனுக்கு- இடைக்காலத் தடை!!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் வி.மணிவண்ணன் தனது சாதாரன வதிவிடத்தை தெளிவாகக் குறிப்பிட முடியாதமையினால் அவருக்கு எதிரான வழக்கு நிறைவுறும் வரையில் மாநகர சபையின் அமர்வுகளில் பங்குகொள்ள இடைக்காலத் தடை உத்தரவினை மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று விதித்தது.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்டு விகிதாசாரப் பட்டியல் மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குத் தேர்வாகிய நிலையில், யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைப் பரப்பிற்குள் வசிக்காது மாநகர சபையின் எல்லைப் பரப்பில் வசிப்பதாக போலியான முகவரியை சமர்ப்பித்து சபைக்கு தேர்வாகியுள்ள மணிவண்ணனின் உறுப்புரிமை செல்லுபடியற்றது. என உத்தரவிடக்கோரி மாநகர சபை எல்லைப் பரப்பிற்குள் நிரந்தர வதிவிடத்தைக் கொண்ட ஒருவர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த வழக்கின் மனுதாரர் சார்பில் அரச தலைவர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலமையில் நிரான் அங்கிற்றல் , செல்வி ஜே.அருளானந்தம் ஆகிய சட்டத்தரணிகளும் எதிர் மனுதாரர் சார்பில் அரச தலைவர் சட்டத்தரணி புவிதரன் , காண்டீபன் , குருபரன் , திணேஸ் ஆகியோரும் முன்னிலையாகினர் .

குறித்த வழக்கு மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில், மாநகர உறுப்பினர் சார்பில் சமர்ப்பித்த ஆவணங்களின் அடிப்படையிலேயே 3 முகவரிகள் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, அதில் சாதாரண வதிவிடம் எது எனக் குறிப்பிட முடியாத தன்மையாலும் எதிர் மனுதாரராகிய வி.மணிவண்ணன் குறித்த வழக்கு நிறைவு பெறும் வரையில் மாநகர சபையின் அமர்வுகளில் பங்குகொள்ளவோ அல்லது வாக்களிக்கவோ இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதோடு அடுத்த அமர்விற்கு ஏனைய பிரதிவாதிகளையும் அழைக்குமாறு மன்று கட்டளையிட்டதோடு வழக்கினை எதிர்வரும் செப்ரெம்பர் 28ம் திகதிக்கு ஒத்திவைத்தது.