யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது பணமும், நகைகளும் திருடப்பட்டன என்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விடுதி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம், நகரில் விக்ரோரியா வீதியில் உள்ள விடுதி ஒன்றிலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பெரும்பான்மையினக் குடும்பத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று சுற்று லாவாக யாழ்ப்பாணம் வந்துள்ளனர். அவர்கள் அந்த விடுதியில் தங்கியுள்ளனர்.
இரவு நகைகள் களவு போய்விடும் கழற்றி வைத்துக் கொள்ளுங்கள் என்று விடுதி உரிமையாளர் கூறினார். அவ்வாறு நகைகளைக் கழற்றி வைத்து விட்டு உறங்கினோம். காலையில் நகைகள் பணத்தைக் காணவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
3 லட்சம் ரூபா பணமும், 12 பவுண் நகையும் திருட்டுப் போயுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளனர்.
இந்த விடுதியில் முன்னரும் பல தடவைகள் திருட்டு நடந்துள்ளது என்று கூறப்படுகின்றது. விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்கேத்தின் அடிப்படையில் விடுதி உரிமையாளரைக் கைது செய்தனர். அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதேவேளை, அங்குள்ள அறை ஒன்றில் பல மருத்து வகைகள் காணப்பட்டன என்றும், அவை தொடர்பாகவும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.