கொழும்பில் உள்ள சர்வதேசப் பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்புப் படித்து வரும் மாணவன் ஷெனான்.
கொச்சிக்கடை தேவாலயத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் காயமடைந்த அவர், கடந்த 2 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து இன்று ஷெனான் பாடசாலைக்கு சென்றுள்ளார்.
பாடசாலைக்கு சென்ற அவருக்கு, ஆசிரியர்கள், மாணவர்கள் அளித்த வரவேற்பில் நெகிழ்ந்துபோயுள்ளார் க்ஷெனான்.
காயத்திலிருந்து மீண்டு பள்ளி வந்த ஷெனானை கேக் வெட்டி சக மாணவர்கள் வரவேற்றனர்.
அதேபோல், பரிசுப் பொருள்கள், பூங்கொத்துகள் கொடுத்தும் அவரை ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் வரவேற்றிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதேவேளை குண்டுவெடிப்புத் தாக்குதலில் முகத்தின் வலது பகுதி மற்றும் வலது கை ஆகிய பகுதிகளில் அவருக்குக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.