யாழ்ப்பாணத்தில் மன்னராட்சி நிலவிய காலத்தில் , கட்டப்பட்ட நல்லூர் மந்திரிமனை அமைந்துள்ள காணி தனக்குச் சொந்தமானது என தெரிவித்து பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் உரிமை கோருவதாக தெரியவந்துள்ளது.
குறித்த நபர் டச்சுக் கால ஆட்சியில் பயன்படுத்தப்பட்ட ஓலைச் சுவடியை ஆவணமாகக் கொண்டு, மந்திரிமனையை உரிமை கோரியுள்ளார்.
காணி உரித்துத் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தில் குறித்த ஓலைச் சுவடியை காட்டி அவர் உரிமை கோருவதாக திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பண்டாரகமவைச் சேர்ந்த குறித்தநபர், தனக்குச் சொந்தமான காணியில் மந்திரிமனை அமைந்துள்ளது என்றுகூறி காணி அமைச்சின் கடிதத்துடன் காணி ஆவணமாக ஓலைச் சுவடியுடன் திணைக்களத்துக்குச் சென்றதோடு, உரிமைக் கான கோரிக்கைக் கடிதத்தையும் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் ஓலைச் சுவடி ஏற்றுக்கொள்ள முடியாத ஆவணம் என்றும், பிரிட்டன் ஆட்சியின் பின்னர் இலங்கைச் சட்டப் படி காணி உறுதியையே காணி உரித்து ஆவணமாக ஏற்றுக் கொள்ள முடியும் எனவும் திணைகழத்தினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் காணி தொடர்பான கோரிக்கையைக் குறித்த நபர் முன் வைத்தமையால் அதனை பிரதேச செயலருக்குத் தெரியப்படுத்தி அதற்கான பதிலை வழங்குவதாகக் திணைகளம் கூறியுள்ளது.
இந்த நிலையில் காணி உரித்து நிர்ணயத் திணைக் களம் ஊடாகக் குறித்த விடயம் பிரதேச செயலருக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை நல்லூர் மந்திரிமனை நல்லூர்ப் பிரதேச செயலக எல்லைக்குள் அமைந்துள்ள நிலையில், தற்போது மந்திரிமனை உள்ள காணி சட்டநாதர் சிவன் கோவில் ஆலய தர்ம கர்த்தா சபையின் நம்பிக்கை நிதியச் சொத்தாக உள்ளது.
மேலும் நல்லூர் மந்திரி மனை இலங்கை அரசின் தொல் பொருள் மூலாதாரச் சொத்தாக உள்ளதோடு, கடந்த 2007ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி அரச பாதுகாக்கும் மூலாதாரமாகத் தெரிவித்து , ஆயிரத்து 486 ஆம் இலக்க அரசிதழ் வெளியிடப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.