எலும்புகூடாக கண்டெடுக்கப்பட்ட மாணவியின் கொலையில் துப்பு துலங்கியது எப்படி…? பொலிசார் தெரிவித்தது என்ன

தமிழகத்தில் 5 அரக்கன்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட 10-ம் வகுப்பு மாணவி கடந்த சில தினங்களுக்கு முன் எலும்புகூடாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், துப்பு துலங்கியதன் பின்னணியில் சிலர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் திருத்தணியை அடுத்த கிராமத்தில் சுப்பிரமணி, எல்லாம்மாள் தம்பதியின் மகள் உஷா. இவர் அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் 7.9.2018 அன்று பள்ளிக்குச் சென்ற உஷா, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில், புகார் கொடுத்தனர்.

இந்த நிலையில் ஐந்து மாதங்களுக்கு பின் (11.2.2019) அன்று கீச்சளம் பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தின் அருகிலிருக்கும் ஓடையில் எலும்புக்கூடாக உஷா கண்டெடுக்கப்பட்டார்.

இந்த வழக்கில் கல்லூரி மாணவர் சங்கரய்யா, உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த வழக்கை துப்பு துலக்கியது எப்படி என பொலிஸ் உயரதிகாரி ஒருவர் விளக்குகையில், “மாணவி உஷா மாயமானதும் அவரின் தந்தை சுப்பிரமணி புகார் கொடுத்தார் இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள, கல்லூரி மாணவர் சங்கரய்யா மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

உடனடியாக மாணவனிடம் விசாரித்தோம். அப்போது அவர் மாணவி உஷாவைப் பார்க்கவில்லை என்று தெரிவித்தார். மேலும் அவருக்கு ஆதரவாக சிலர் வந்தனர். அப்போது சங்கரய்யா மீது நடவடிக்கை எடுக்க எங்களிடம் எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை.

மாணவி வழக்கு குறித்து கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் தேடுதல் நடைபெற்றது. பெங்களூர் கூட சென்றிருந்தோம். மாணவியின் தோழிகள், பள்ளியில் தொடர்ந்து பல கோணங்களில் விசாரித்து வந்தோம்.

இந்தச் சூழ்நிலையில்தான் மாணவியின் எலும்புக்கூடு கீச்சளம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. அதன் பின் DSP. சேகர் தலைமையிலான பொலீஸ் குழு விசாரணையில் களமிறங்கியது.

ஏற்கெனவே மாணவன் சங்கரய்யாவின் மீது எங்களுக்குச் சந்தேகம் இருந்ததால் அவரின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தோம். அப்போது அவர், மாணவி மாயமான நாளிலிருந்து குறிப்பிட்ட 4 பேரிடம் தொடர்ந்து பேசியது தெரிய வந்தது. இதனால் மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தினோம். அவர், எதுவும் தெரியாது என்று கூறினார்.
பின்பு அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் நடந்த உண்மைகளை ஒப்புக் கொண்டார்.

சம்பவத்தன்று மாணவி தினம் தோறும் பால் கொடுக்கும் வீட்டில் பால் கொடுக்க செல்லவில்லை. இதனால் அந்த நபரின் மீதும் எங்களின் சந்தேகம் இருந்தது. ஆனால், அவர்தான் சில தகவல்களை எங்களிடம் கூறினார். அவர் கூறிய தகவல்தான் 5 பேர் சிக்க காரணமாக இருந்தது.

இந்தக் கொலை வழக்கில் இன்னும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் உள்ளது. எனவே தொடர் விசாரணை நடைபெற்று வருகின்றது.

மாணவி கொலை செய்யப்பட்ட தகவல் தெரிந்த கல்லூரி மாணவர் சங்கரய்யா, எதுவும் நடக்காததுபோல அதே கிராமத்தில் சுதந்திரமாகச் சுற்றி வந்துள்ளார். எனவே அவரின் நடவடிக்கைகள் கிராமத்தில் யாருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை. தற்போது அவர் கைது செய்யப்பட்ட தகவல் கிராம மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.