வரி அடையாள எண் (TIN) பெறுவதற்கான காலம் நீடிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கைக்கு அமைய அறிமுகப்படுத்தப்பட்ட வரி அடையாள எண் (TIN) பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயற்றிட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வரி அடையாள எண்ணைப் பெறுவதற்கு பொதுமக்களுக்கு சிறிது கால அவகாசம் தேவை என்பதை அரசாங்கம் உணர்ந்ததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பித்தவர்களுக்கு வரி அடையாள எண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் முதலாம் திகதிக்கு முன் வரி அடையாள எண்ணை பெறுவதற்கு பதிவு செய்ய வேண்டும் என உள்நாட்டு இறைவரி திணைக்களம் முன்னதாக அறிவித்திருந்தது.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த எண்ணை பெற்றுக்கொள்ள வேண்டும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வரி அடையாள எண் பதிவு செய்யாதவர்களுக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்திருந்தது.

சுமார் 100,000 வரி அடையாள எண் வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பொது ஊழியர் சங்கத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் பொருளாதார நெருக்கடியின் விளைவுகளுடன் போராடி வரும் பொதுமக்களுக்கு வரி அடையாள எண்ணை பெறுவதற்கான கட்டாய கால அவகாசம் நடைமுறைக்கு சாத்தியமற்றதாக கருதப்படுகிறது.