பூட்டான் தலைநகர் திம்புவில் இடம்பெறவுள்ள தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்தாட்டத் தொடரில் பங்குபற்றவிருக்கும் இலங்கை கால்பந்தாட்டக் குழாமில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு வீராங்கனைகள் இடம்பிடித்தனர்.
தொடருக்குச் செல்லவுள்ள 23 பேர் கொண்ட குழாமில் உள்ளடக்கப்பட்டுள்ள வீராங்கனைகளின் பெயர் விபரங்களை நேற்றுமுன்தினம் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.
இதில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த முன்கள வீராங்கனைகளான ரகுதாஸ் கிருஷாந்தினி, ஏ.டி.மேரி கொன்சிகா மற்றும் பின்கள வீராங்கனையான பாஸ்கரன் செயந்தினி ஆகியோரும், மகாஜனக் கல்லூரியின் பின்கள வீராங்கனையான எஸ்.தேவப்பிரியா, மத்தியகள வீராங்கனை யு.ஜோகிதா மற்றும் கோல் காப்பாளரான ஜெகநாதன் ஜெதுன்சிகா ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்.
இலங்கை தேசிய அணியில் தமிழ் மாணவிகள் அதிகளவில் இடம்பிடித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.