சாள்ஸ் அன்ரனியை முகத்துக்கு நேரே திட்டிய சூசை: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன?- 07

சாள்ஸ் அன்ரனி

பீஷ்மர்

விடுதலைப்புலிகள் அமைப்பின் இறுதி முடிவெடுக்கும் அதிகாரமையமாக பிரபாகரன் இருந்தார் என்றாலும், சமாதான உடன்படிக்கையின் பின்னர் பிரபாகரனின் அணுகுமுறையில் சிறிய வித்தியாசம் ஏற்பட்டது. அமைப்பின் உள்ளக நிர்வாக முடிவுகளை எடுக்கும் அதிகாரங்களை தளபதிகளிடம் பகிர்ந்தளித்தார். சமாதான உடன்படிக்கை வரை அமைப்பின் ஒவ்வொரு சின்னசின்ன விசயத்தையும் பிரபாகரன்தான் கவனித்தார். ஆனால், தனக்கு பின்னரும் அமைப்பு செயற்பட வேண்டுமென கருதியதாலோ என்னவோ, உள்ளக முடிவுகளை எடுக்கும் பொறுப்பை தளபதிகளிடம் கையளித்தார்.

(இந்த தொடரின் புதிய அத்தியாயங்கள் ஒவ்வொரு ஞாயிறு கிழமைகளில் பதிவேற்றம் செய்வோம்)

இந்த நிர்வாக பகிர்ந்தளிப்பில் இன்னொரு விசயமும் நடந்தது. அது – பிரபாகரனின் மூத்தமகன் சாள்ஸ் அன்ரனியின் எழுச்சி.

நிர்வாக முடிவுகளை தளபதிகளே எடுக்கலாமென அனுமதிக்கப்பட்டதன் பின்னர், 2005ம் ஆண்டில் அமைப்பிற்குள் முழுமையாக இறக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி, அடுத்த சில வருடங்களில் அமைப்பின் உள்ளக முடிவுகளை எடுப்பவராக மாறினார்.

டயப்பிற்றிஸ், கொலஸ்ரோல் போன்ற பிரச்சனைகளையும் பிரபாகரன் எதிர்கொள்ள தொடங்க, அவருக்கு ஓய்வு அவசியமாக இருந்தது. 1970களின் ஆரம்பத்தில் தலைமறைவாக செயற்பட காலம் தொடங்கி 2002 இல் ரணிலுடன் சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது வரையான 32 வருடங்கள் பிரபாகரன் ஓய்வொழிச்சல் இல்லாமல் போராடியவர்.

ஒரு மனிதனின் வாழ்நாளில் 32 வருடங்களை போராட்டத்தில் செலவிடுவதென்பது மிகப்பெரிய தியாகம். பதினாறு வயதில் ஆரம்பித்தது. 48 வயதில் ரணிலுடன் சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். இடைப்பட்ட காலத்தில் பிரபாகரனை கொல்ல நடந்த உள்வீட்டு சதிகள், எதிரிகளின் முயற்சிகள், உயிர் நிச்சயமற்ற போர்க்களங்கள் என அவர் கடந்து வந்த பாதை நினைத்தும் பார்க்க முடியாதது.

வெளியுலக தொடர்புகளை துண்டித்து, குடும்பத்துடனும் நேரத்தை செலவிட முடியாமல் அவர் போராளிகளுடன் இரகசிய வாழ்க்கை வாழ்ந்தார். ஓய்வொழிச்சல் இல்லாமல் சிந்தித்தார், செயற்பட்டார். இதனாலேயே விரைவாக களைத்தும் விட்டார்.

இதனால் அமைப்பிற்குள் புது வடிவத்தை கொடுக்க பிரபாகரன் விரும்பியிருக்கலாம். இன்னொன்று- கால மாற்றம், தலைமுறை மாற்றம், தொழில்நுட்ப மாற்றம் என்பன புது இரத்தங்களின் தேவையை அமைப்பிற்குள் உருவாக்கியிருக்கலாம். எப்படியோ, புதிய தளபதிகளின் எழுச்சி அமைப்பிற்குள் நடந்தது.

சமாதான காலப்பகுதியில் இன்னும் அதிகமாக நிர்வாக கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. அவற்றை அந்தந்த பிரிவு பொறுப்பாளர்களே முழுமையாக கையாண்டார்கள். பிரபாகரன் பொறுப்புக்களிலிருந்து மெதுமெதுவாக விடுபட தொடங்கினார். 2003 காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளிலொன்று, விடுதலை புலிகள் அமைப்பின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துபவராக பொட்டு அம்மான் நியமிக்கப்பட்டது.

மாத்தையா சதியின் பின்னர் பிரபாகரன் எடுத்த உறுதியான முடிவு, இனி எந்த சந்தர்ப்பத்திலும் அமைப்பில் பிரதிதலைவர் ஒருவரை நியமிப்பதில்லை. (அந்த முடிவை அவர் 2009 மே ஆரம்பத்தில் கைவிட்ட சந்தர்ப்பத்தை பின்னர் பார்க்கலாம்) அதனை அவர் உறுதியாக கடைப்பிடித்தார். மாத்தையாவின் பின்னர் அமைப்பை வழிநடத்த தகுதியானவராக பொட்டம்மான் இருந்தார்.

முடிவுகள் எடுப்பதில், மற்றவர்களை கட்டுப்படுத்தும் ஆளுமையில் என மற்றைய தளபதிகளை விட முன்னிலையில் இருந்தார். மாத்தையா விவகாரத்தில் அவரை கைது செய்ய அனுமதி வாங்கி, விசாரணை செய்து, மரணதண்டனை வழங்கியதுவரையான நடவடிக்கையில் பொட்டம்மானின் பங்கு முக்கியமானது. இயக்கத்தின் பிரதி தலைவரையே இல்லாமலாக்கும் வல்லமை மிக்கவராக 1994இலேயே அவர் விளங்கினார் என்பது அவரது வல்லமையை புரிய வைக்கும்.

புலனாய்வு கட்டமைப்பை உருவாக்கி இந்திய பிரதமரை, இலங்கை ஜனாதிபதியை இன்னும் பல அமைச்சர்கள் உள்ளடங்களாக பல அரசியல் தலைவர்களை இல்லாமலாக்கிய திட்டங்கள் எல்லாம் பொட்டம்மானின் மூளைக்குள் உதித்தவைதான். விடுதலைப்புலிகளின் முக்கிய நகர்வுகள் அனைத்தையும் பிரபாகரனுடன் இணைந்து அவர்தான் எடுத்தார். பிரபாகரனின் இரகசிய இருப்பிடத்திற்கு சோதனைகள் இல்லாமல் நேரடியாக சென்ற- இம்ரான் பாண்டியன், ராதா படையணி தளபதிகளை தவிர்த்த- ஒரே தளபதி பொட்டம்மான்தான்.

பிரபாகரன்- பொட்டம்மான்- தீபன்- ஜெயம்

2003 இல் கிட்டத்தட்ட அவர்தான் அமைப்பின் இரண்டாவது தலைவர் என்ற நிலையை பிரபாகரன் உருவாக்கினார். இயக்கத்தின் நிர்வாக, அன்றாட செயற்பாடுகள் தொடர்பாக தளபதிகள் கூடி ஆராய்வார்கள். ஆரம்பத்தில் பிரபாகரன் தலைமையில்த்தான் அந்த கூட்டங்கள் நடந்தன.

2003 இலிருந்து பொட்டம்மான் தலைமையில் அவை நடக்க தொடங்கின. இயக்கத்தின் அன்றாட நடவடிக்கைகள் பற்றிய முடிவை அந்த கூட்டத்தில் எடுத்தார்கள். பிரபாகரன் இல்லாமலேயே கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

நிர்வாக, செயற்பாட்டு முடிவுகளை பொட்டம்மான் எடுக்க அனுமதித்தார். பொட்டம்மான் தளபதிகளிற்கு ஓரளவு சுதந்திரம் வழங்கினார்.

2005ஆம் ஆண்டு இதில் சிறிய மாற்றம் ஏற்பட்டது. அப்பொழுதுதான் பிரபாகரனின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனி விடுதலைப்புலிகள் அமைப்பின் முழுநேர போராளியாகினார். அதற்கு முன்னர் சில வருடங்களின் முன்னரே விடுதலைப்புலிகளின் தொழில்நுட்ப பிரிவினால் நிர்வாகிக்கப்பட்ட போராளிகளிற்கான உயர்தொழில்நுட்ப கல்லூரியில் சாள்ஸ் அன்ரனி (அவருடன் பிரபாகரனின் மகள் துவாரகாவும்) சிலகாலம் படித்தார்தான். ஆனால் செயற்பாட்டு ரீதியான விடுதலைப்புலியானது 2005 இல்த்தான்.

அமைப்பிற்குள் நுழைந்த சாள்ஸ் அன்ரனியை, பிரபாகரன் தடல்புடலாக வரவேற்றார் என்பதே உண்மை. எப்படியெனில், கணினி பிரிவென்ற பிரிவொன்றை ஆரம்பித்து அதற்கு சாள்ஸ் அன்ரனியை பொறுப்பாக நியமித்தார்.

சிறிய பிரிவாக ஆரம்பிக்கப்பட்ட கணினி பிரிவு வெகுவிரைவிலேயே பிரமாண்டமாக விஸ்தரிக்கப்பட்டு விட்டது. பெருமளவு நிதி, வளம் ஒதுக்கப்பட்டது. ஆளணி ஒதுக்கப்பட்டது. வாய்ப்புக்கள் வழங்கப்பட்டது.

2007 இல் கணினிப்பிரிவில் காணப்பட்ட ஆளணியும், விடுதலைப்புலிகள் அமைப்பின் ஏனைய பிரிவுகளில் காணப்பட்ட ஆளணியும் சமமானதென கூறுவார்கள். அந்தக்காலப்பகுதியில் போராளிகள் பகிடியாக இன்னொன்றையும் பேசிக்கொள்வார்கள்.

எல்லா பிரிவுகளில் இருந்தும் கணிணி பிரிவிற்கு சடுதியாக ஆளணி திருப்பப்பட்ட நேரமது. போராளிகள் “நீ எந்த இயக்கம் மச்சான்.. தலைவரின் இயக்கமா? சாள்ஸ் அன்ரனியின் இயக்கமா?“ என பகிடியாக பேசிக்கொண்ட சம்பவங்களும் உள்ளன!

சாள்ஸ் அன்ரனி நல்ல தொழில்நுட்ப மூளையுடையவர். சண்டியன், மொக்கன் முதலான புலிகளின் சொந்த தயாரிப்பு எறிகணை செலுத்திகளை உருவாக்க முன்னின்றவர். இரசாயன ஆயுத தயாரிப்பிலும் முயற்சிகளை செலுத்தினார். ஆனால், அவர் நல்ல வழிநடத்தும் திறனுள்ள தலைவரல்ல.

வடிவேலுவின் இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் வந்த சமயம். இந்த பெயரை கொண்டு சாள்ஸ் அன்ரனியை இரகசியமாக தமக்குள் பகிடி செய்தனர்- அவரது நிர்வாகத்துடன் தொடர்புடைய மூத்த போராளிகள். சாள்ஸ் அன்ரனி நல்ல சாப்பாட்டு பிரியர். ரோல்ஸ் என்றால் அலாதி பிரியம். அதனால் தன்னை சூழ ஒரு சாப்பாட்டு இராச்சியத்தையே நிறுவினார்.

புலிகளின் தயாரிப்பு சண்டியன்

சாள்ஸ் அன்ரனியை முதன்முதலில் எடைபோட்டவர் சூசை. இறுதிவரை அவர் சாள்ஸ் அனிரனியின் தலைமைத்துவத்தை ஏற்கவில்லை. அவரின் குறைகளை பகிரங்கமாக சுட்டியும் காட்டினார்.

யாரும் சாள்ஸ் அன்ரனியை குறைசொல்ல தொடங்க முன்னர் முல்லைத்தீவு கடற்கரையில் ‘கொப்பர் உருவாக்கினதெல்லாத்தையும் அழிக்கிறதுக்காகத்தான் வந்தனியா?’ என சூசை ஒருநாள் கோபத்தின் உச்சியில் திட்டினார்.

(தொடரும்)

நன்றி : தமிழ்பக்கம்