500 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் கடலில் மூழ்கிய பொக்கிஷத்தை தேடும் சீனா..!

சீன நாட்டுக் கப்பல் ஒன்று 500 ஆண்டுகளிற்கு முன்பு யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் மூழ்கியுள்ளது.

இந்த நிலையில் இலங்கை – சீன நாட்டுத் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து இது தொடர்பில் அகழ்வு ஆராச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அல்லைப்பிட்டி பகுதியில் 500 ஆண்டுகளிற்கும் முன்னர் இலங்கை கடற்பரப்பில் பயணித்த ஓர் கப்பல் விபத்திற்கு உள்ளாகி மூழ்கியுள்ளதாகவும் அதன் எச்சங்கள் அப்பகுதியில் இருப்பதாகவும் ஓர் தகவல் சீன அரசிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் சீன நாட்டின் ஏற்பாட்டில் 1980 ஆம் ஆண்டு இப் பகுதியில் ஓர் ஆரம்ப ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த ஆய்வின்போது சில சீன நாட்டு நாணயம் மற்றும் சீனக் கப்பலின் சில பாகங்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அப்பகுதியில் ஆய்விற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் நாட்டில் இடம்பெற்ற போர் காரணமாக குறித்த ஆய்வுப் பணி இடைநிறுத்தப்பட்டிருந்த்து.

இந்த நிலையில் தற்போது சீன அரசு உத்தியோக பூர்வமாக இலங்கை அரசிடம் எழுத்தில் விண்ணப்பித்து இலங்கை சீன அரசுகள் ஒப்பந்தம் மேற்கொண்டு அதன் அடிப்படையில் தற்போது சீன மற்றும் இலங்கை நாடுகளின் தொல் பொருள் திணைக்களங்கள் இணைந்து அல்லைப்பிட்டி கடற்பகுதியில் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.