பிறந்த நாள் அன்று வெளிநாடு ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட இலங்கை அகதி!

புகலிடம் தேடி இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா சென்ற இலங்கையர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நல்லதம்பி வசந்தகுமார் என்பவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் தனது நாற்பத்தி ஐந்தாவது பிறந்த நாள் அன்று தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரிஸ்பேன் நகருக்கு சென்றவர், நவுயு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தார். எனினும் அவருக்கு நிரந்தர வதிவிட வீசாவோ, புகலிடமோ கிடைக்கவில்லை.

சில நாட்களுக்கு முன்னர், பிரிஸ்பேன் லோகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வசந்தகுமார் அவர்கள், மருத்துவ மனையிலேயே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அதனால், அவர் மூளைச்சாவடைந்துள்ளார். சிகிச்சைகள் பலனளிக்காது என்று மருத்துவர்கள் முடிவெடுத்த பின்னர், அவருக்கு வழங்கப்பட்டிருந்த செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளார்கள்.

நேற்று மாலை 5:45 மணியளவில் நல்லதம்பி வசந்தகுமார் உயிரிழந்தார்.

வவுனியா கோவில்குளம் பகுதியை சேர்ந்த வசந்தகுமாருக்கு நான்கு பெண்பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.