கிளிநொச்சியை உலுக்கிய கொலை : மீண்டுமொரு வித்தியாவா? (படங்கள்)

கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியிலிருந்து இன்று காலை இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இரணைமடு நீர்ப்பாசன கால்வாய்க்குள் சடலமொன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு கிளிநொச்சி பொலிஸார் விரைந்துள்ளனர்.

இதனையடுத்து சடலம் கிடந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சடலத்தின் அருகிலிருந்து சிவில் பாதுகாப்பு படையாளிகள் அணியும் இடுப்புப்பட்டி மற்றும் பேனை என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் சுமார் இருபது வயதானவர் எனவும், சடலத்தின் முகப் பகுதியில் காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த இளம் பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை உயிரிழந்த பெண் தொடர்பான விபரங்கள் எதுவும் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் வெளியிட்டுள்ள சந்தேகமானது, மீண்டுமொரு வித்தியாவாக இருக்கக்கூடுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.