பால்ராஜை பார்த்து சிரித்த தமிழ்செல்வன்… புலிகளின் பாதுகாப்பு செயலாளர்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 10

பீஷ்மர்

நான்காம் கட்ட ஈழப்போரில் தளபதிகளின் கைகளிலேயே பெரும்பாலான விடயங்களை பிரபாகரன் விட்டுவிட்டார் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். முன்னர் ஒரு காலத்தில் விடுதலைப்புலிகளின் இராணுவ தாக்குதல்களில் அதிஉச்சப்பட்ச இரகசியம் பேணப்படும். தாக்குதல் திகதிக்கு ஒருசில நாட்களின் முன்னர்தான் மிக முக்கிய அணிகளிற்கு, எந்த முகாமை தாக்க போகிறோம் என்பதே தெரியும்.

பொட்டம்மான்- பால்ராஜ்
பொட்டம்மான்- பால்ராஜ்

இலக்கு வைக்கப்பட்ட முகாமையொத்த தரைத்தோற்றமுள்ள பிரதேசமொன்றில், தாக்குதலுக்குட்படவுள்ள இராணுவ முகாமின் மாதிரி அமைப்பை உருவாக்கி பயிற்சிபெறுவார்கள். தரைத்தோற்றம், எந்த முகாமை தாக்க வாய்ப்புள்ளதென்பதை ஊகிக்கும் கில்லாடிகள், ஓரவிற்கு ஊகிக்கலாமே தவிர, மற்றும்படி விசயத்தை சொல்வதில்லை புலிகள். உப அணிகளிற்கு, தாக்குதல் இடத்திற்கு செல்லும் வரை எங்கு போகப்போகிறோம் என்பதே தெரியாது. அவ்வளவு இரகசியமாக விசயத்தை வைத்திருந்தார்கள்.

ஆனால், பின்னாளில் அப்படியான தன்மை இல்லாமல் போய்விட்டது. தாக்குதல் ஒன்றுபற்றிய தகவல் போராளிகள் மத்தியில் சாதாரணமாக உலாவத் தொடங்கிவிட்டது. இது தளபதிகளின் பலவீனமாக இருக்கலாம். அல்லது, பல பிரிவுகளை சேர்ந்தவர்களை இந்த கூட்டத்தில் இணைப்பதாலும் இருக்கலாம்.

தளபதிகளின் மந்திராலோசனையில் முக்கிய தளபதிகள் பலரும் இணைந்திருப்பார்கள். அரசியல், இராணுவ, நிதி, புலனாய்வு பிரிவுகளை சேர்ந்த தளபதிகள் கலந்து கொள்வார்கள். ஒரு விடயத்தை திட்டமிடும்போது தமது துறை சார்ந்த பார்வையை வெளியிடுவார்கள். இது சில சமயங்களில் ஒட்டுமொத்த இயக்கத்தின் பார்வையை வெளிப்படுத்தாது.

பால்ராஸ், தீபனின் யோசனைகள் நிராகரிக்கப்பட்டதாக கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம் அல்லவா, அந்த நிராகரிப்பு மேற்படி நிலைமையால்தான் நடந்தது.

முல்லைத்தீவு தாக்குதல் திட்டத்தை விபரிக்கும் பால்ராஜ்
முல்லைத்தீவு தாக்குதல் திட்டத்தை விபரிக்கும் பால்ராஜ்

மன்னாரில் இராணுவம் படைநடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒரு சந்திப்பொன்று நடந்தது. அதில் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் இராணுவத்தின் திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

இராணுவத்தில் அதிகளவு ஆளணி பெருக்கப்பட்டது, விமானப்படை பலம், புலிகளின் ஆயுததளபாட பற்றாக்குறை என்பவற்றை கருத்தில் கொண்ட பால்ராஜ் ஒரு யோசனை முன்வைத்தார்.

இதுவரையான காலத்தைபோல இனி இராணுவத்துடன் மரபுப்போர் புரிய முடியாது. வன்னியின் பரந்த நிலப்பரப்பை குறைந்த போராளிகளுடன் தக்கவைப்பது சிரமம். அதனால் தவிர்க்க முடியாமல் சில நிலப்பரப்புக்களை விட்டுத்தான் கொடுக்க வேண்டும். ஆனால் கேந்திர முக்கியத்துவமான பகுதிகளை உள்ளடக்கி ஒரு பாதுகாப்பு நிலையை உருவாக்குவோம். எஞ்சிய பகுதிகளை விட்டுவிடுவோம். அந்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்திவிட்டு போர் புரிவோம் என கூறி அவர் ஒரு வரைபடத்தை அங்கிருந்தவர்களிடம் காண்பித்தார்.

அதில் வடக்கு திசையில் முகமாலை முன்னரணும், கிழக்கு மேற்கில் புதிய உத்தேச முன்னரணொன்றையும் குறித்திருந்தார். புதிய அரண் கிழக்கில் மணலாறு தொடக்கம் மேற்கில் மல்லாவி ஊடாக நாச்சிக்குடா வரை சென்றிருந்தது. அப்போது இராணுவம் மன்னாரின் எல்லையில் தாக்குதலை ஆரம்பிக்கவேயில்லை. நாச்சிக்குடாவிலிருந்து மணலாறுவரை 20 அடி உயரத்தில் மண்அணை உருவாக்கி, அதன முன்பாக அகழிகள், பொறிவெடிகள் அமைப்பதுதான் பால்ராஜின் திட்டம். அதற்காக உத்தேசமாக 5 கோடி செலவையும் மதிப்பிட்டிருந்தார்.

ஆனால் அன்றைய கூட்டத்தில் அதனை பலரும் நகைச்சுவையாக பார்த்தனர்.

அப்பொழுது இராணுவம் நிலைகொண்டிருந்தது மன்னார் தள்ளாடியில்.

தள்ளாடியிலிருந்து பால்ராஜ் குறிப்பிட்ட நாச்சிக்குடா பகுதி 29.4 மைல் தொலைவில் இருந்தது. இராணுவத்திற்கு சும்மா அவ்வளவு தூரத்தை விட்டுக் கொடுப்பது பைத்தியக்காரத்தனம் என்பதே மற்றைய தளபதிகளின் நிலைப்பாடு.

ஏனெனில், முன்னரைவிட அதிநவீன ஆயுதங்கள் இருப்பதால் இராணுவத்தின் நகர்வை சுலபமாக தடுத்துவிடலாமென அவர்கள் கருதினார்கள்.

பால்ராஜின் திட்டத்தை நிராகரிப்பதில் தமிழ்செல்வன், தமிழேந்தி ஆகியோர் முன்னின்றனர். குறிப்பாக தமிழேந்தி ஒரேயடியாக மறுத்தார். 5 கோடி பணத்தில் நிறைய ஆயுதங்கள் வாங்கி வந்து மன்னாரிலிருந்தே இராணுவத்தை விரட்டி, அந்த பகுதியையும் கைப்பற்றலாமென்றார்.

மூன்றாம் ஈழப்போரிற்கும் நான்காம் ஈழப்போரிற்குமிடையிலான பிரதான வேறுபாடே இதுதான். மூன்றாம் ஈழப்போரில் பிரபாகரன் என்ற ஒருவரின் சிந்தனையை மையப்படுத்தியே அனைத்தும் இயங்கியது. அவர் தனது நோக்கத்தை அடைய எதை முன்னிலைப்படுத்துவது, எதை ஒத்திவைப்பதென தீர்மானித்தார். தனது பலத்தை உணர்ந்து அதற்கேற்ப உபாயங்களை வகுத்தார். நான்காம் ஈழப்போரில் அந்த தன்மையில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவுதான் மேலே சொன்ன உதாரணம்.

பால்ராஜ்- தமிழ்ச்செல்வன்
பால்ராஜ்- தமிழ்ச்செல்வன்

இராணுவ விவகாரங்களில் தேர்ச்சிகுறைந்த தமிழ்ச்செல்வன், தமிழேந்தி போன்றவர்கள் இராணுவ விவகாரங்களில் முடிவெடுக்கும் அதிகாரமிக்கவர்களாக மாறியது ஒரு பாதிப்பே. தமிழேந்தி புலிகளின் நிதித்துறை பொறுப்பாளராக நீண்டகாலம் இருந்தவர். வீணான செலவில்லாமல் ஒரு மனிதன் எப்படி வாழலாமென கணக்குப்பண்ணி, அதையே போராளிகளின் வாழ்க்கைமுறையாகவும் ஆக்கியவர். ஒரு போராளியின் ஒருநாள் பட்ஜெட்டை வடிவமைப்பது அவர்தான். விடுதலைப்புலிகளின் நிதி உள்ளிட்ட குறைந்த வளங்களை கச்சிதமாக பிரித்து, நிர்வாகத்தை சீராக நகர்த்தியதில் தமிழேந்தியின் பங்கு பெரியது. 1990களில் இருந்து அவர்தான் நிதித்துறை பொறுப்பாளராக இருந்தார். பின்னாளில்தான் பாலதாஸ் அதன் ஒரு பகுதிக்கு பொறுப்பாளராகினார். ஆனால், தமிழேந்திதான் நிதித்துறையின் அதிகாரம்மிக்க நபர்.

பொருளாதாரத்தடை காலத்திலும் அவர் வளங்களை கையாண்ட விதம் அலாதியானது. அந்த விடயத்தில் அவரை மிஞ்ச ஒருவர் கிடையாது. வயதில் மூத்தவர் என்ற காரணத்தாலும் எல்லா தளபதிகளும் அவருடன்ஒத்துழைத்தனர். ஒத்துழைக்காவிட்டாலும் வளங்களை பங்கிடுவது, பயன்படுத்துவதில் அவர் சிறப்பாக செயற்பட்டார்.

தமிழேந்தி- தமிழ்செல்வன்
தமிழேந்தி- தமிழ்செல்வன்

இதனால்தான் இறுதி யுத்த சமயத்தில் விடுதலைப்புலிகளின் பாதுகாப்பு செயலர் என்ற பதவி உருவாக்கப்பட்டு அந்த பொறுப்பில் தமிழேந்தி நியமிக்கப்பட்டார். 2008 இன் இறுதியில் அது நிகழ்ந்தது. பெரும் ஆளணி, ஆயுத தளபாட நெருக்கடியில் புலிகள் திண்டாடினார்கள். ஆனால் நிறைய ஆளணி மற்றும் ஆயுதங்கள் பல பிரிவுகளிடம் சிதறிக்கிடந்தது. அதனை முறையாக ஒழுங்கமைக்க முடியாமல் இருந்தது. அந்த சமயத்தில் இலங்கை பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச சிறப்பாக செயற்பட்டு புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அந்த தாக்கமோ என்னவோ புலிகளும் பாதுகாப்பு செயலர் பதவியை உருவாக்கினார்கள். புலிகள் அமைப்பில் முதலும் கடைசியுமாக அந்த பொறுப்பு உருவாக்கப்பட்டது அப்போதுதான்.

ஆட்களை வேலைவாங்கும், வளங்களை சரியாக பங்கிடும் திறனிருந்த தமிழேந்தி யுத்த அணுகுமுறையிலும் செல்வாக்கு செலுத்துபவராக மாறியதன் விளைவுதான் பால்ராஜின் திட்டம் ஆரம்பத்திலேயே நிராகரிக்கப்பட்டது. எனினும், பின்னர் பால்ராஜின் திட்டம்தான் பொருத்தமானதென புலிகள் செயற்பட முனைந்தபோது நிலைமை கைமீறி சென்றுவிட்டது. நாச்சிக்குடாவிலிருந்து ஒரு மண்அணையை உருவாக்கிய போதும் அது முழுமையடையவில்லை. மண்அணை இல்லாத பகுதிக்குள்ளால் இராணுவம் நுழைந்து அந்த பகுதியை கைப்பற்றிவிட்டது. பால்ராஜின் திட்டப்படி முன்னரே மண்அணையை உருவாக்கியிருந்தால் சிலவேளைகளில் நிலவரங்களில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.

(தொடரும்)

நன்றி : தமிழ் பக்கம்