பீஷ்மர்
பால்ராஜிற்கு ஏற்பட்டதை போன்ற அனுபவம் ஒன்று தீபனிற்கும் ஏற்பட்டது. அது 2009 இன் தொடக்கம். யுத்தம் வன்னியை இறுக்கத் தொடங்கி, புலிகளிற்கு என்ன செய்வதென தெரியாத இக்கட்டான சந்தர்ப்பத்தில் ஏற்பட்டது. அந்த சம்பவத்திற்கு முன்னர், சில பின்னணி தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
அரசுக்கும் புலிகளிற்குமிடையிலான சமாதான உடன்பாடு முறிவடைந்தபோது புலிகள் இரண்டு முனைகளில் களங்களை திறந்தார்கள். ஒன்று, சம்பூரில். மற்றையது யாழை குறிவைத்து முகமாலை, கிளாலி முனைகளில். சம்பூரில் சிறிய முன்னேற்றத்தை புலிகள் கண்டார்கள். ஆனால் பின்னர் இராணுவம் அதனை முறியடித்தது. யாழ் நோக்கிய நகர்வில் எதுவும் நடக்கவில்லை.
2006 நடுப்பகுதியில் யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றுவதற்கான திடீர் தாக்குதல் ஒன்றை புலிகள் மேற்கொண்டனர். முகாலை தொடக்கம் கிளாலி, சங்குப்பிட்டி வரையான இராணுவ முன்னரண்களை தகர்த்து ஊடறுக்க புலிகள் முயன்றனர். கேரதீவு பகுதிக்கு அண்மையில் மாலதி படையணியின் அணியொன்றுதான் ஊடறுத்து உள்நுழைந்தது. வேறெந்த முனைகளிலும் புலிகளால் உள்நுழைய முடியவில்லை. ஊடறுத்து உள்நுழைந்த மகளிர் அணியை இராணுவம் சுற்றிவளைத்துவிட்டது.
புலிகள் கிட்டத்தட்ட ஒரு வாரமாக முயன்றும் இராணுவ முன்னரணை உடைக்க முடியவில்லை. உண்மையில் புலிகளின் அந்த முயற்சி ஒரு விசப்பரீட்சை. புலிகள் எடுத்த தவறான இராணுவ முடிவுகளில் ஒன்று. பலனில்லாத அந்த யுத்தத்திற்கு செலவிட்ட ஆளணி, ஆயுததளபாடங்களை சேமித்திருந்தால் அல்லது சாதகமான வேறொரு முனையில் தாக்குதல் நடத்தியிருந்தால் வேறுவிதமாக சூழ்நிலைகள் மாற்றமடைந்திருக்கும். புலிகளிற்கான ஆயுததளபாட வரவு கடல்மார்க்கமாக தடுக்கப்பட்டிருந்தது. ஆளணி பற்றாக்குறை நிலவியது. யாழ்ப்பாண யுத்தத்தை நடத்தினால் இராணுவத்திற்கு பேரழிவை ஏற்படுத்தி ஆயுததளபாடங்களை பெற்றுக்கொள்ளலாமென நினைத்தார்கள்.
ஆனால் முகமாலை முன்னரண் இரண்டு தரப்பாலும் கடக்க முடியாதது என்பதே உண்மை. இராணுவம் அதற்கு முன்னர் பலமுறை முயன்று கையை சுட்டுக் கொண்டது. முகாமாலையிலுள்ள புலிகளின் அரண்களை உடைத்து உள்நுழைய இராணுவம் தன்னால் இயலுமானவரை முயற்சி செய்துவிட்டுத்தான் கைவிட்டது. அதன்பின்னர்தான் புலிகள் கையை சுட்டுக்கொண்டார்கள்.
முகமாலை பகுதி குறுகியது. கேந்திர முக்கியத்துவம் மிக்கது. அதனால் இரண்டுதரப்பும் நெருக்கமாக, பலமான முன்னரணை அமைத்திருந்தன. மன்னார் பகுதி போன்ற பரந்தமுனையென்றால் ஒரு பகுதியில் முடியாவிட்டால் இன்னொரு பகுதியால் முயன்று நுழையலாம். முகமாலையில் அது முடியாது. இரண்டு தரப்பும் முன்னரணிற்கு முன்பாக கண்ணிவெடி வயலை உருவாக்கி வைத்திருந்தன. அதனைவிட, இரண்டு தரப்பு முன்னரணிற்கும் முன்பாக வெளியான பிரதேசம் இருந்தது.
வன்னி மீதான யுத்தத்தின் வெற்றியென்பது கிளிநொச்சி, முல்லைத்தீவை கைப்பற்றுவதே. 2006இல் இராணுவம் நிலைகொண்டிருந்த பகுதிகளிலிருந்து பார்த்தால், இந்த இரண்டு இடங்களிற்கும் நெருக்கமாக இருந்தது யாழ். முன்னரண்தான். ஆனால் இராணுவம் இறுதி யுத்த நகர்வை யாழில் இருந்து செய்யவில்லை. பலநூறு மைல்களிற்கு அப்பாலிருந்த மன்னாரின் எல்லையிலிருந்து ஆரம்பித்தது.
அது ஏன்?
இலங்கை இராணுவத்தில் திறமையான அதிகாரிகள் முன்னணிக்கு வந்ததன் விளைவது. வழக்கமாக இப்படியான சந்தர்ப்பங்களில் முகமாலையிலிருந்து நான்கைந்து முறை முயன்று பார்த்துவிட்டு, முடியாதப்பா என இராணுவம் இருந்துவிடும். ஆனால் இம்முறை புலிகளை அழிப்பதில் மிக கவனமாக திட்டமிட்டு படைநடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
முதலாவதாக, முகமாலையிலிருந்து நகர முடியாதென்பது இராணுவத்திற்கு மிக தெளிவாக தெரியும். ஏற்கனவே முயன்று பார்த்து தெரிந்து கொண்டுவிட்டது. அதனால், மன்னாரிலிருந்து நடவடிக்கையை ஆரம்பித்தது. மன்னாரிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட படைநடவடிக்கைக்கு மூன்று நோக்கங்கள்.
ஒன்று, புலிகளின் ஆளணியை சிறுகச்சிறுக அழிப்பது. மன்னாரில் தள்ளாடியிலிருந்து இராணுவத்தின் 58வது டிவிசன் நகர்வு ஆரம்பித்து மடு, பெரிய பண்டிவிரிச்சான், பாலமோட்டை, அடம்பன் பகுதிகளில் யுத்தம் மிகநீண்ட நாட்கள் நீடித்தது. அந்த யுத்தங்களில் அதிக தூரம் கைப்பற்றும் ஆவலெதுவும் இராணுவத்திடம் இருக்கவில்லை. தினமும் சிறிய முன்னகர்வு, புலிகளின் அணிகளை பெட்டி (BOX) அடித்தல்தான் இராணுவத்தின் நோக்கம். தினமும் யுத்தம். இறந்த போராளிகளின் உடல்கள் கிளிநொச்சிக்கு வரிசையாக வரத் தொடங்கியது.
ஆரம்பத்தில் இராணுவம் முன்னகர முயல்வதை போல காட்டினாலே புலிகள் தீவிரமாக போரிட்டனர். பின்னர்தான் இராணுவத்தின் உத்தியை புரிந்து கொண்டார்கள். புலிகளின் கோட்டையான கிளிநொச்சி, முல்லைத்தீவிற்குள் நுழைவதற்கு முன்னரேயே எல்லையோரத்தில் புலிகளின் ஆளணியை சிறிதுசிறிதாக அழித்துவிடுவது படையினரின் நோக்கங்களில் ஒன்று.
அடுத்தது, மேற்கு கரையோரமாக தமிழகத்துடன் கொண்டிருந்த பின்தள தொடர்பை நிறுத்துவது.
மற்றையது, முகமாலை புலிகளின் முன்னரணை அப்புறப்படுத்துவது. முகமாலை முன்னரணிலிருந்து கிட்டத்தட்ட 150 மைல்கள் அப்பாலிருந்து படையினர் நகர்ந்து வந்து, அதனை பின்பக்கமாக தாக்கி அகற்ற திட்டமிட்டார்கள். முகமாலை முன்னரண் அகற்றப்பட்டால்தான் யாழில் குவிக்கப்பட்டிருந்த போரிடும் ஆற்றலுள்ள 40,000 படையினர் வன்னியை நோக்கி முன்னகர்த்தப்படலாம்.
(முகமாலையிலிருந்து புலிகள் பின்வாங்கியதன் பின்னர் நாகர்கோவிலை மையமாக கொண்டிருந்த 55வது டிவிசனும், முகமாலையில் நிலைகொண்டிருந்த 53வது டிவிசனும் முன்னகர ஆரம்பித்தனர்) முகமாலை புலிகளின் அரணை உடைக்க முடியாமல் மன்னாரிலிருந்து படை நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டியிருந்ததெனில், அந்த நிலைகளின் இறுக்கத்தை கற்பனை செய்துகொள்ளுங்கள்.
முகமாலை உள்ளிட்ட வடபோர்முனை கட்டளைத்தளபதியாக செயற்பட்டவர் தீபன்.
மன்னாரிலிருந்து முன்னகர்ந்த இராணுவம் 2009 ஜனவரி முதலாம் நாள் பரந்தன் சந்தியை எட்டிவிட்டது. முகமாலை உள்ளிட்ட வடபோர்முனை முன்னரணிற்கு நேரடியான தரைப்பாதை துண்டாடப்பட்டுவிட்டது. அதற்காக அனைத்துவழிகளும் துண்டாடப்பட்டு முற்றுகைக்குள் சிக்கிவிட்டார்கள் என்று அர்த்தமல்ல. வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளத்தின் ஊடாக பாதை இருந்தது. அப்போது மாரிகாலம் என்பதால் சுண்டிக்குளம் கடற்கரையையொட்டிய பாதை சிறிது தூரத்திற்கு கடலுடன் இணைந்திருந்தது. சுமார் ஒரு கிலோமீற்றர் கடல்வழி பயணமிருந்தது.
யாழ்ப்பாணத்திலிருந்து படையினர் முன்னகர முடியாது. பரந்தனிற்கு வந்த இராணுவத்தினர் ஆனையிறவு பக்கமாக நகரவிடாமல் இன்னொரு அரண் அமைத்துவிட்டு, அந்த பகுதியை தக்கவைக்கலாமென தீபன் நினைத்தார். ஆனால், திடீரென அணிகளை பின்னகர்த்துமாறு தலைமைபீடம் கட்டளையிட்டது.
தீபன் அதிர்ந்து போனார். முகமாலையை தக்கவைத்திருப்போம் என்பதே அவரது நிலைப்பாடு. தலைமையும் அதே முடிவைத்தான் எடுக்கும் என தீபன் நம்பியிருந்தார். ஆனால் தலைமை வேறு முடிவெடுத்தது. இந்த முடிவு தீபனிற்கு சிறிதும் விருப்பமில்லை.
(தொடரும்)
நன்றி : தமிழ் பக்கம்