மாளிகாவத்தையில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பெண்! நபரொருவர் சிஐடியினரால் கைது

கொழும்பு மாளிகாவத்தையில் பெண்ணொருவர் சுட்டுக்கொலை செய்வதற்கு இரகசியத் தகவல் வழங்கிய சந்தேகத்தில் நபரொருவரை கொழும்பு குற்றவியல் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அவ்வாறு தகவல் கூறுவதற்கு பயன்பட்டதாக கூறப்படும் 3 தொலைபேசிகளையும், 3 சிம் அட்டைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஒரு பிள்ளையின் தாயான மொகம்மட் மும்மிரி சித்திரினேஷா என்ற 31 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டார்.

உயிரிழந்த பெண்ணின் கணவரால் ஒப்பந்தத்தில் இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாளிகாவத்தை ஜும்மா சந்திக்கு அருகாமையில் செல்லும் வீதியில் கடந்த 26ம் திகதி பிற்பகல் குறித்த பெண் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதாள உலக குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர்.

பாதாள குழு உறுப்பினர் கஞ்சிபானி இம்ரான் என்பவரின் முதல் மனைவியே கொலை செய்யப்பட்டதாகவும், கஞ்சிபானி இம்ரான், பாதாள தலைவர் மாகதுரே மதுஷ் என்பவருக்கு நெருக்கமானவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.