பருத்தித்துறைப் பகுதியில் கஞ்சாவை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் நெல்லியடிப் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவித்ததாவது, கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக அல்வாய்ப் பகுதியில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 23 வயதுடைய இளைஞன் 300 கிராம் கஞ்சாவுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மற்றொரு இளைஞனின் வீட்டில் கஞ்சா இருக்கும் தகவலை அவர் பொலிஸாரிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞனின் அலைபேசியிலிருந்து மற்றைய இளைஞனுக்கு அழைப்பு எடுக்கப்பட்டது. கஞ்சா கொள்வனவு செய்பவர்கள் போன்று பொலிஸார் அந்த இளைஞனின் வீட்டுக்குச் சென்றனர். அவர் நிலத்தில் புதைத்து வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சாவை எடுத்து வந்தபோது பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். நீதிமன்றில் இன்று முற்படுத்தப்படவுள்ளனர்.