இலங்கையில் கற்குகையில் இருந்து மீட்கப்பட்ட சடலங்களால் அதிர்ச்சி..!!

இலங்கையில் கற்குகையில் இருந்து மீட்கப்பட்ட சடலங்களால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

காட்டுக்கு வேட்டையாடுவதற்காகச் சென்ற இருவர் குகையொன்றிலிருந்து, சடலமாக இன்று காலை 9.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதுடன், இவர்களுடன் சென்ற நாயும் குகையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ராகலை- சென்லெனாட் தோட்டத்தைச் சேர்ந்த 31 வயதான செல்லையா அசோக்குமார் மற்றும் கனியா பிரிவு, மெதவத்த, ஹல்கரனோயாவைச் சேர்ந்த 29 வயதான மகேஸ்வரன் ரத்தினேஸ்வரம் ஆகிய இருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் வேட்டையாடுவதற்காக, நேற்று காலை வீட்டிலிருந்து சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்கள் கற்குகைக்குள் புகையேற்றி விட்டு, கற்குகைக்குள் உள்நுழைந்தமையால் இந்த மரணங்கள் சம்பவத்திருக்கலாமென, இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகலை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.