யாழில் இப்படி நடக்குமென்று நினைத்துகூட பார்க்கவில்லை!

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு கிழக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கும் என யாரும் கனவிலும் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் என பேராசிரியர் ராமு.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டிருந்த அவர் இன்று நாடு திரும்பிய நிலையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“வடக்கு கிழக்கில் பாடசாலைகள் இயங்குகின்றன. எனினும், மாணவர்களை இலக்கு வைத்து அங்கு போதைப்பொருள் விநியோகிக்கப்படுகின்றன. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விநியோகம் செய்யப்படும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

தமிழ் மக்களின் மிகப்பெரிய அடையாளமே கல்விதான். அந்த கல்வியை அழிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

மேலும், வடக்கில் ஒருலட்சத்திற்கும் அதிகமான கணவனை இழந்த பெண்களும், கிழக்கில் 37 ஆயிரத்திற்கும் அதிகமான கணவனை இழந்த பெண்களும் உள்ளனர்.

குறிப்பாக பாலியல் தொல்லைகள், குடும்ப வறுமைகள், கடன் தொல்லைகள் என்பன வடக்கு கிழக்கில் நிறைந்து கிடக்கின்றன.

மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களுக்கு கடன் கொடுத்து, அவர்களை துன்புறுத்த ஒரு கொள்ளை கூட்டமே இயங்கி வருகின்றது என்றும், இதனால் பெண்கள் தற்கொலை செய்வது அதிகரிக்கிறது” அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.