மகிந்தவை ஆதரிக்க றிசார்ட்டிடம் பேரம் பேசிய பசில்: 20 கோடியுடன் மகிந்த பக்கம் தாவிய தமிழ் அரசியல்வாதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தேர்வு வழங்க முடியாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிசார்ட் பதியூதீன் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று காலை 6 மணியளவில் அமைச்சர் றிசார்ட் பதியூதீனை சந்தித்துள்ளார். மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவிகள், இரண்டு பிரதியமைச்சர்கள் பதவிகள் மற்றும் 200 மில்லியன் ரூபாய் பணம் ஆகியவற்றை வழங்குவதாக கூறி பேரம் பேசியதாக கூறப்படுகிறது.

எனினும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க முடியாது என றிசார்ட் பதியூதீன் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை இன்று காலை மற்றுமொரு கொடுக்கல் வாங்கல் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷை இன்று காலை சந்தித்த பசில் ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்க 200 மில்லியன் ரூபாயை தருவதாக பேரம் பேசியுள்ளதுடன் அதற்கு சுரேஷ் இணங்கியதாக பேசப்படுகிறது.

இதனடிப்படையிலேயே வடிவேல் சுரேஷ், மகிந்த ராஜபக்சவை இன்று சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த நிலையில், கொழும்பு அரசியலில் பணம் மற்றும் பதவிகளுக்கான பேரம் பேசல்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.