யாழ். சிறைக்குள் சந்தேகநபர் தற்கொலை முயற்சி

யாழ்ப்பாணம் விளக்கமறியல் சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி ஒருவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டார். அவரை ஆபத்தான நிலையில் மீட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.

உடும்பிராய் பகுதியைச் சேர்ந்த இராஜேஸ்வரன் கஜன் (வயது – 23) என்பவரே இவ்வாறு தற்கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

திருட்டுக் குற்றச்சாட்டில் கடந்த செப்ரெம்பர் மாதம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

தன்னைப் பார்ப்பதற்கு உறவினர்கள் எவரும் சிறைச்சாலைக்கு வரவில்லை என்ற மனவிரக்தியிலேயே அவர் தற்கொலை முயற்சியை மேற்கொண்டார் என்று சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவித்தன. எனினும் தற்கொலைக்காக அவர் தூக்குப் போட்டுக்கொண்ட முறை தொடர்பில் சிறைச்சாலையிலிருந்து தகவலைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.