வீடு புகுந்த வாள்வெட்டுக் கும்பல் கணவன், மனைவி மீது கொலைவெறித் தாக்குதல் – குடத்தனையில் அதிகாலை பயங்கரம்

வீடு புகுந்த வாள்வெட்டுக் கும்பல் உறக்கத்திலிருந்த கணவன், மனைவி மீது கொலைவெறித் தாக்குதலை மேற்கொண்டது. அவர்களை வாளால் வெட்டியதுடன், இருவரையும் இழுத்து வந்து வீதியில் விட்டுவிட்டு கும்பல் தப்பித்துள்ளது.

வடமராட்சி குடத்தனையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
சம்பவத்தில் எம்.சித்திரவடிவேல் (வயது-50) என்பவரும் அவரது மனைவி ஜெயந்தி (வயது -40) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வீட்டுக்குள் புகுந்த கும்பல் உறக்கத்திலிருந்த கணவன், மனைவியை கொடூரமாக வாளால் வெட்டிச் சாய்த்தது. அவர்களது மகள் ஒருவர் வேறு அறையிலும் மற்றொரு மகள் பேத்தியாரின் வீட்டில் இருந்ததால் அவர்களுக்குப் பாதிப்பில்லை.

வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த கணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 24ஆவது விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளார். மனைவிக்கு தலையில் ஆழமான வெட்டுக்காயம் ஏற்பட்டதால் அவருக்கு சத்திரச்சிகிச்சை முன்னெடுக்கப்படுவதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.