யாழ். நகர உணவகத்தில் சாப்பாட்டுக்குள் அட்டை

யாழ்ப்பாணம் நகரில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட மதிய உணவில் அட்டை காணப்பட்டதாக யாழ்.மாநகர சபை சுகாதாரப் பிரிவுக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கே.கே எஸ் வீதியில் அமைந்திருக்கும் சைவ உணவகத்துக்கு இளைஞர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சென்றுள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட மதிய உணவுக்குள் அட்டை காணப்பட்டுள்ளது.

அதனை அந்த உணவகத்தின் உரிமையாளருக்கு இளைஞன் சுட்டிக்காட்டியுள்ளார்.
“முகாமையாளரிடம் என்னைத் தனியக் கூட்டிச் சென்று எனது சட்டைப் பைக்குள் பணத்தைத் திணித்தார். ‘நடந்தது நடந்து போச்சு, விடுங்க தம்பி’ என்று சமாளித்தார்” என்று அந்த இளைஞன் தனது முகநூலில் நேரலை காணொலியாகப் பதவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மாநகர பொதுச் சுகாதாரப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டது. இளைஞனின் தகவலை முறைப்பாடாக ஏற்று நடவடிக்கை எடுப்பதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

மழை காலத்தில் யாழ்.மாநகர உணவகங்களின் சுகாதார சீர்கேடுகள் தொடர்பில் பல வழக்குகள் கடந்த வாரம் யாழ்ப்பாண மேலதிக நீதிவான் நீதிமன்றில் தொடுக்கப்பட்டன. அந்த உணவகங்களை சுகாதார மேம்பாடு உறுதிப்படுத்தப்படும் வரை மூடுமாறு நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.