கோத்தபாயவின் அதிரடி அறிவிப்பு!

அமைச்சு பதவியை பெற்றுக் கொள்வதை விட ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது எனது நோக்கம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்த விடயத்தை கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மோதல் கொழும்பையும் அதன் புறநகர்பகுதிகளையும் நாளாந்த கார்க்குண்டுகள்,தற்கொலை படை தாக்குதல்கள் மூலம் போர்க்களமாக மாற்றியிருந்தது. இதனை சர்வதேசத்தினர் புரிந்து கொள்ளவில்லை.

விடுதலைப்புலிகள் மிகப்பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். படையினருக்கு சமமான ஆயுதங்களை வைத்திருந்தனர்.

இலங்கையிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ யுத்தம் என்பது சிறந்த விடயமில்லை அது அருவருப்பான விடயம். நாங்கள் யுத்தத்தை உருவாக்கவில்லை. மஹிந்த உருவாக்கவில்லை, மஹிந்த ராஜபக்ச அதனை முடித்து வைத்தார்.

புதிய அரசாங்கம் மீண்டும் கடன்களிற்காக சீனாவை நாடும் என தெரிவிக்கப்படுவதில் உண்மையில்லை.

நாங்கள் எந்த நாட்டிற்கும் சார்பாக நடக்கவில்லை, இலங்கையுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் எவருடனும் நாங்கள் இணைந்து பணியாற்ற விரும்புகின்றோம். நாங்கள் சர்வதேச அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்ற விரும்புகின்றோம் ஆனால் அவர்கள் நியாயமாக நடந்துகொள்வில்லை என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறப்பு அதிரடி படையினர் தீவிர பாதுகாப்பில் இருந்தபடியே கோத்தபாய இந்த விடங்களை குறிப்பிட்டார் என குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய அமைச்சுகளிற்கும் பதவிகளுக்கும் குடும்ப வாரிசுகளை நியமிக்கும் பாரம்பரியத்தை கொண்ட நாட்டிற்கு இதுவொன்றும் புதிய விடயமல்ல.

ராஜபக்ச குடும்பத்தவர்கள் மீண்டும் இலங்கை அரசியலில் ஆதிக்க செலுத்துவதற்கு தயாராவதை இது புலப்படுத்துகின்றது என சர்வதேச ஊடகமான புளும்பேர்க் குறிப்பிட்டுள்ளது.