ஜனாதிபதியுடன் இணைய தயார்! ரணில் அறிவிப்பு

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக நாங்கள் நீதிமன்றம் சென்றாலும் அவர்கள் பாராளுமன்றத்திற்கு சென்று இதற்கு தீர்வை காணுங்கள் என தெரிவிப்பார்கள் என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்திய நீதிமன்றங்களுக்கும் இலங்கை நீதிமன்றங்களிற்கும் இந்த விடயத்தில் வித்தியாசம் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்து நாளிதழிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதியுடன் இன்னமும் இணைந்து பணியாற்ற தயாரா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ரணில் விக்கிரமசிங்க எனக்கு அவருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து எந்த பிரச்சினையும் இல்லை, என தெரிவித்துள்ளதுடன் இந்த கேள்வியை நீங்கள் அவரிடம் கேட்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிப்பதற்கான போதிய எண்ணிக்கை உள்ளது எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.அவர்களிற்கு போதிய பெரும்பான்மையில்லாததன் காரணமாகவே பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு அவர்கள் தயங்குகின்றனர் எனவும் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தினை கூட்டுவது தாமதமாவது எனக்கு கவலையளிக்கின்றது என குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க இதன் காரணமாக நாடு மேலும் ஸ்திரமின்மையை நோக்கி தள்ளப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.அரசமைப்பில் தனிப்பட்ட பாரபட்சங்களிற்கு இடமில்லை என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றம் விரைவில் கூட்டப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.