மைத்திரி- மகிந்த சதியைத் தோற்கடிக்க எந்தப் பிரேரணைக்கும் ஆதரவு – ஜேவிபி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் சதித் திட்டத்தை தோற்கடிப்பற்காக கொண்டு வரப்படும் எந்த பிரேரணைக்கும், தமது கட்சி ஆதரவு அளிக்கும் என்று ஜேவிபி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க கருத்து வெளியிடுகையில்,

“பதவிகள், சலுகைகள், மற்றும் கறுப்புப் பணத்தை பயன்படுத்தி மைத்திரி- மகிந்தவினால் முன்னெடுக்கப்படும் இந்த சதித் திட்டம் தோற்கடிக்கப்பட வேண்டும்.

முதலில் இந்த அரசியல் சதித் திட்டத்தை தோற்கடிப்பதற்காகவே ஜேவிபி செயற்பட வேண்டியுள்ளது.

இந்த சதித் திட்டம் நாடாளுமன்றத்துக்குள்ளேயும் வெளியேறும் தோற்கடிக்கப்பட வேண்டும். எனவே, நாளை ஜேவிபி நான்கு முக்கிய நகரங்களில் கருத்தரங்குகளை நடத்தவுள்ளது.

பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ள நிலையில் நாடாளுமன்றத்தை உடனடியாக சபாநாயகர் கூட்ட வேண்டும்.

சபாநாயகர் அண்மையில் வெளியிட்ட காட்டமான அறிக்கையை ஜேவிபி வரவேற்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.