ரணிலை பிரதமராக்குவதற்கு மைத்திரி விடுத்துள்ள கோரிக்கை!

பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க வேண்டுமாக இருந்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 113 பேரின் சத்திய கடதாசிகளை வழங்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவ்வாறு இல்லையெனில் ஐக்கிய தேசிய கட்சியில் வேறு ஒருவரின் பெயரை முன்மொழியுமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டு, மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டார். இதனால் கொழும்பு அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் பதவிக்கு ரணில் – மகிந்த இரண்டு பேரும் உரிமை கோரிவந்தனர். இதனையடுத்து இரண்டு தரப்பினரையும் நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கோரப்பட்டது.

தற்போதைய நிலையில், ரணில் விக்ரமசிங்கவிற்கு பெரும் ஆதரவு இருந்து வருகின்றது. அதேநேரம் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டு அதற்கு ஆதரவாக 122 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

இந்நிலையில், ரணிலை மீண்டும் பிதமராக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவை ஒருபோதும் பிரதமர் பதவிக்கு நியமிக்க போவதில்லை என ஜனாதிபதி கூறியிருந்தார்.

இந்த பின்னணியிலேயே, பிரதமராக ரணில் விக்ரமசிங்களை நியமிக்க வேண்டுமாக இருந்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 113 பேரின் சத்திய கடதாசிகளை வழங்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இது குறித்த உறுதியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களை தீர்க்கும் வகையில் இன்று மாலை ஜனாதிபதி முக்கிய சந்திப்புகளையும் மேற்கொண்டுள்ளார்.

இதனால் விரையில், அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட கூடும் என அரசியல் அவதானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.