ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தான் மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தெரிவித்துள்ளார்.
அவர் தம்மிடம் தெரிவித்தார் என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
“முறையான நடைமுறைகள் பின்பற்றப்படாததால், நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேணையையும் தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் ஜனாதிபதி எம்மிடம் கூறினார்.
அத்துடன், எமது பெரும்பான்மையை அடுத்த சில நாட்களில் காண்பிக்குமாறும் அவர் தெரிவித்தார்” என்றும் குறிப்பிட்டார்.
அதேவேளை, நேற்று முன்தினம் மாலை அதிபர் செயலகத்தில் ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஜேவிபி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பின் போதும், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக மீண்டும் நியமிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரி கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னொரு நம்பிக்கையில்லா பிரேரணையின் மூலம், மஹிந்த ராஜபக்ச பதவியில் இருந்து நீக்கப்பட்டால், ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பதிலாக, வேறொருவரை பிரதமர் பதவிக்கு முன்மொழியுமாறும், மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார் எனவும் கூறப்படுகிறது.






