யுத்தக் காலத்தில் கிளிநொச்சிக்கு சென்றதைப் போன்றே தற்போது நாடாளுமன்றத்திற்கு செல்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின்போதும் தெரிவுக்குழு விடயத்திலும் ரணில் விக்ரமசிங்க தரப்பிற்கு ஆதரவாக வாக்களித்த 15 பேரைக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் 6 பேரைக்கொண்ட மக்கள் விடுதலை முன்னணி என்பன ரணில் விக்ரமசிங்கவை பிரதமராகக் கொண்ட அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காது.
எனவே, தெரிவுக்குழுவில் ஆம் என்று வாக்களித்த 121 பேரில் 21 பேர் விலகும்போது அவர்களுடைய ஆதரவாளர்களின் எண்ணிக்கை 100ஆக அமையும். தற்போது மகிந்த ராஜபக்சவிற்கு 103 பேர் உள்ளனர்.
எனவே பெரும்பான்மை எம்மிடமே உள்ளது என ரோஹித அபேகுணவர்தன எம்.பி. தெரிவித்தார்.
யுத்தகாலங்களில் கிளிநொச்சி செல்வதைப் போன்றே தற்போது நாடாளுமன்றத்திற்குச் செல்கின்றோம்.
நாடாளுமன்றத்திற்கு வெளியே பொலிஸாரின் சோதனையிடல் கிளிநொச்சி செல்கையில் காணப்பட்ட சோதனையிடல் போன்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.






