நாடாளுமன்றத்தைக் கலைத்து கடந்த மாதம் வெளியிட்ட, சர்ச்சைக்குரிய வர்த்தமாணி அறிவிப்பை ரத்துச் செய்வது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீவிரமாக ஆலோசித்து வருவதாக, தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதிக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளன.
நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக அளிக்கப்படும் தீர்ப்பு தமக்குப் பாதகமாக அமையக் கூடும் என்ற அச்சத்திலேயே ஜனாதிபதி இந்த முடிவு குறித்து ஆராய்வதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் 7ஆம் திகதி நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது, உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.
இந்த நிலையில் அதற்கு முன்னதாக- பெரும்பாலும் வரும் 5ஆம் திகதி, நாடாளுமன்றத்தைக் கலைத்து வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பை ஜனாதிபதி ரத்துச் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி தொடர்ச்சியாக கலந்துரையாடும் ஒருவர், இதுபற்றிக் கருத்து வெளியிடுகையில்,
வர்த்தமாணி அறிவிப்பை ஜனாதிபதி மீளப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளார்.
நாடாளுமன்றக் கலைப்பு தவறானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்பதில் தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, எனினும் வர்த்தமாணி அறிவிப்பை மீளப் பெறும் திட்டம் தொடர்பாக தான் எதையும் அறியவில்லை என்று, ஜனாதிபதி பேச்சாளர் தர்மசிறி எக்கநாயக்க கூறினார்.
அதேவேளை, உச்சநீதிமன்றம் தனக்குச் சாதகமாக தீர்ப்பளிக்கும் சாத்தியம் இல்லாததால், இந்தச் சிக்கலில் இருந்து கௌரவமாக வெளியேறுவதற்கு ஜனாதிபதி எதிர்பார்ப்பதாக, சிறிசேனவின் கட்சியைச் சேர்ந்த இன்னொரு வட்டாரம் தெரிவித்துள்ளது.






