மீண்டும் பழைய நிலை ஏற்படலாம் – தமிழ் மக்களை மிரட்டும் யாழ். கட்டளைத் தளபதி

தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிடின் மீண்டும் வீதிகளில் சோதனைச் சாவடிகளை அமைக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வட்டுக்கோட்டை பகுதியில் இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட குளத்தினை இன்று பொது மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிங்கள மக்களும், இராணுவத்தினரும் தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்துடன் வாழவே விரும்புகின்றனர். யுத்தத்திற்கு முன்னரான காலப் பகுதியில் தமிழ் – சிங்கள மக்கள் ஒற்றுமையுடன் நட்புடன் வாழ்ந்தார்கள்.

யுத்த காலத்தில் துன்பப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வினை இன்பமான வாழ்வாக மாற்றுவது எமது பொறுப்பாகும். எனவே தமிழ் மக்களை இவ்வாறே தொடர்ந்து அமைதியான வாழ்வை வாழ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்த அமைதியான வாழ்வு மீண்டும் மாறுமாயின், காவல்துறையை சேர்ந்தவர்களும், இராணுவத்தினரும் வீதியோரங்களில் காவல் நிலையங்களை அமைத்து வீதியில் செல்வோரை வழிமறித்துச் சோதனை செய்யும் பழைய காலம் மீண்டும் வரும்.

அதேபோல இராணுவத்தினருடன் இணைந்து ஒற்றுமையாக தமிழர்கள் வாழ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த அமைதியை யாராவது ஒருவர் குலைக்க விரும்பினால் அவர்களுக்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்காமல் இந்த நாட்டின் அமைதியை பேணுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.