மைத்திரிபால சிறிசேன ஒக்ரோபர் 26 ஆம் திகதி வழங்கிய பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டதன் மூலம், மஹிந்த ராஜபக்ச பாரிய முட்டாள்தனமான காரியத்தை செய்து விட்டார் என கூறப்படுகின்றது.
ராஜபக்ச விசுவாசியான, சட்டநிபுணர் கோமின் தயாசிறி இதனை தெரிவித்துள்ளார்.
“பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு, மஹிந்தவுக்கு யார் ஆலோசனை கூறினார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
மஹிந்தவின் சட்டவாளராக இருந்த போது, எனது ஆலோசனைகளை, அவர் சரியாக நடைமுறைப்படுத்தி வந்தார்.
இப்போது நடக்கும் அரசியல் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை அடுத்து, இப்போது நாட்டில், பிரதமரும், அமைச்சரவையும் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு இப்போது மிகவும், மோசமான உறுதியற்ற நிலையில் இருக்கிறது. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியே இப்போது, மிகவும், சரியான முடிவை எடுக்க வேண்டும்.
இப்போது நாடாளுமன்றத் தேர்தலுக்குச் செல்வதற்கு அரசியலமைப்பில் வழியில்லை. ஆனால், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு சட்ட வழிமுறை உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.