அரசியலமை்புச் சட்டத்தை மீறியதாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் உறுதியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்து வருவதால், அமைச்சரவையை நியமிப்பதில் தொடர்ந்தும் தாமதமாகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசிய முன்னணி அமைச்சர்களின் பட்டியல் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தது. தான் விரும்பும் நபர்களுக்கே அமைச்சு பதவிகளை வழங்குவேன், வேறு எவருக்கும் அமைச்சு பதவிகளை வழங்க போவதில்லை என்ற உறுதியான முடிவில் ஜனாதிபதி இருப்பதாக கூறப்படுகிறது.
19 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய ஜனாதிபதிக்கு வழங்கப்படும் அமைச்சுக்களுக்கு மேலதிகமான அமைச்சுக்களை தன்வசம் வைத்துக்கொள்ள ஜனாதிபதி முயற்சித்து வருகிறார்.
ஊடகத்துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுக்களை ஜனாதிபதி தன்வசம் வைத்திருக்க முயற்சிப்பதாக பேசப்படுகிறது.
ஜனாதிபதியின் இந்த முயற்சி தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி எதிர்ப்பை வெளியிட்டுள்ளதால், பொலிஸ் திணைக்களம், தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், லேக் ஹவுஸ், தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், சட்டமா அதிபர் திணைக்களம் போன்ற பல நிறுவனங்களை தன்வசம் வைத்துக்கொண்டு வெற்று அமைச்சுக்களை ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சித்து வருகிறார்.
அத்துடன் ஜனாதிபதி நியமித்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இணைந்த ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அமைச்சு பதவிகளை வழங்கியதுடன் அரசாங்கத்தில் இணையுமாறு தொலைபேசி ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
எனினும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க போவதில்லை என ஜனாதிபதி அச்சுறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.






