அமைச்சர்களின் விபரங்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்?

நாட்டில் கடந்த சில நாட்களாக நீடித்த அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று காலை பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையை நியமிப்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் நேற்று இரவு சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதியின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரு தரப்புக்கும் இடையில் சில விட்டுக்கொடுப்புகளுக்கு மத்தியில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இன்று காலை அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது. அந்த வகையில், நிதி அமைச்சராக மங்கள சமரவீர, மின்சக்தி எரிபொருள் – வியாபார அபிவிருத்தி அமைச்சராக ரவி கருணாநாயக்க, சிவில் விமான சேவைகள் அமைச்சராக அர்ஜூன ரணத்துங்க, சுகாதார அமைச்சராக ராஜித்த சேனாரட்ன ஆகியோர் நியமிக்கப்படவுள்ளனர்.

அத்துடன், நகர திட்டமிடல் – நீர்வழங்கல் – உயர்கல்வி அமைச்சராக ரவூப் ஹக்கீம், வர்த்தகம் – கைத்தொழில் அமைச்சராக ரிசாத் பதியுதீன், வீடமைப்பு அமைச்சராக சஜித் பிரேமதாச, தேசிய நல்லிணக்கம் ஒருமைப்பாடு அமைச்சராக மனோ கணேசன், மெகாபொலிஸ் நகர அபிவிருத்தி அமைச்சராக சம்பிக்க ரணவக்க ஆகியோர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இது குறித்த உறுதியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.