தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய தலைவர் போல் செயல்படும் சுமந்திரன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய தலைவர் போல் செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப செயல்படுவது தமிழ் மக்களுக்கு செய்யும் பாரிய துரோகமாகும் என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் மத்தியில் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தமிழர்களுக்காக ஜனநாயக ரீதியாக போராடி தோற்றுப் போன முன்னாள் தமிழ் தலைவர்களுக்குப் பின் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தேசிய தலைவர் பிரபாகரனாலும் துரதிஸ்ட வசமாக தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியாமல் போனது.

அதன் பின்னர் களமிறங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு வட கிழக்கு தமிழ் மக்கள் தமது வாக்குகளினால் வரமளித்திருந்தனர்.

ஆனால் அந்த வரத்தினை இன்று கூட்டமைப்பினர் எதற்காக பயன்படுத்திகின்றார்கள் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினைப் பற்றி சற்றும் சிந்திக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய தலைவர் போல் செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப செயல்படுவது வடகிழக்கில் அவர்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு செய்யும் பாரிய துரோகமாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கிய கூட்டமைப்பினர் எதனை பெற்றுக் கொடுப்பதற்கு நிபந்தனை வழங்கினார்கள் என்பதனை அம்பலப்படுத்த வேண்டும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் எமது தமிழினத்திற்கு செய்யப்பட்ட துரோகங்கள் என்ன என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.

இதேவேளை, தமது இருப்பை இழந்து நிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்வரும் தேர்தலில் மக்களிடம் எதனை சொல்லி வாக்குகளைப் பெறப் போகின்றார்கள் என்பதனை காலம் பதில் சொல்லும் எனவும் பிரபா கணேசன் குறிப்பிட்டுள்ளார்.